Ayodhya Ram Mandir - அனுமன் அழைத்தது போல் உணர்கிறேன்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சிரஞ்சீவி
அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டது குறித்து தெலுங்கு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். தமிழிலிருந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோரும் ஹிந்தியிலிருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமருக்கென்று கோயில் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் இந்தக் கோயில் கட்டுமான பணி கடந்த சில வருடங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இந்துக்கள் பலரும் இந்த கோயில் திறப்பு விழாவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அந்தவகையில் ராமர் கோயில் திறப்பு விழாவானது இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோயில் திறப்பு விழா படு பிரமாண்டமாக இன்று நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கலந்துகொண்ட பிரபலங்கள்: இந்த கோயில் திறப்பு விழாவில் விவிஐபிக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் அதிக அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் திரைத்துறையிலிருந்து ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அனுபம் கெர், தனுஷ், சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல், பாடகர் சோனு நிகம், இயக்குநர் ரோஹித் ஷெட்டி என பலரும் கலந்துகொண்டிருப்பதால் அயோத்தி நகரம்தான் இன்று டாக் ஆஃப் தி டவுன்.
தெலுங்கு பிரபலங்கள் கருத்து: இந்த சூழலில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து சிரஞ்சீவி தெரிவிக்கையில், "இது ரொம்பவே சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதை அரிய வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். எனது தெய்வமாக இருக்கும் அனுமன் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்ததுபோல் உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்த ராமர் சிலை நிறுவுவதை காண வாய்ப்பு பெற்றிருக்கும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்றார்.
ராம்சரண் கருத்து: அதேபோல் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் கூறுகையில், "ராமர் கோயில் திறப்பு விழாவை காண வேண்டும் என்பது எனது நீண்ட கால எதிர்பார்ப்பாகும். நாங்கள் அனைவருமே அயோத்தியில் இருப்பம் மிகவும் மரியாதைக்குரியது" என்றார். முன்னதாக சிரஞ்சீவி, அவரது மனைவி, ராம்சரண் ஆகியோர் தனி விமானம் மூலம் அயோத்திக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண்: இவர்களைத் தொடர்ந்து ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கும் பவன் கல்யாண் காரில் அயோத்திக்கு செல்லும் வீடியோவை பகிர்ந்து, "ஜெய் ஸ்ரீராம்.. அயோத்திக்கு செல்லும் வழியில். இராமரின் பிரான் பிரதிஷ்டை பார்க்க் அசெல்கிறேன். ராமர் நமது பாரத நாகரிகத்தின் நாயகன். ராமரை மீண்டும் அயோத்தி கொண்டு வருவது ஐந்து நூற்றாண்டுகள் போராட வேண்டியதாயிற்று" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் இந்த விழாவில் கலந்துகொள்வது வாழ்நாள் பாக்கியம் என்று ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











