அயோத்தி தீர்ப்பு.. காலா நடிகையின் கருத்து என்ன தெரியுமா?
டெல்லி: நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தீர்ப்பை மதிக்கணும்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் காலா படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்தியர்களான நாம் மதிக்க வேண்டும் என்றும், நாம் ஒற்றுமையுடன் ஒரே நாடு என்ற எண்ணத்தில் இதனை கடந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமைதிக்கான நேரம்
ரங்தே பசந்தி, டியர் ஜிந்தகி உள்ளிட்ட படங்களில் நடித்த குனால் கபூர், இது அமைதிகாக்க வேண்டிய நேரம் என்றும், அனைவரும் இந்தியர்கள் என்ற நோக்கத்துடன் மாற வேண்டிய நேரம் என்றும் கூறியுள்ளார். மேலும், நாம் ஒற்றுமையுடன் இணைந்து உறுதியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ன ஒரு தீர்ப்பு
ஓம் சாந்தி ஓம், அப்னா சப்னா மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கொய்னா மித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒரு அற்புதமான தீர்ப்பு இது. பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது குறித்தும் மகிழ்ந்துள்ளார்.
மதிக்க வேண்டும்
பாகா மில்கா சிங், தி ஸ்கை இஸ் பின்க் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்து, சமூக வலைதளங்களில் மேலும் பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











