கேரள ஹைகோர்ட்டில் வழக்கறிஞர்.. சினிமா மீது தீராத காதல்.. மறைந்த இயக்குநர் சச்சியின் திரைப்பயணம்!
சென்னை: இயக்குநர் சச்சிதானந்தனின் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இயக்குநர் சச்சிதானந்தன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்தவர். சச்சிதானந்தன் சச்சி என்றும் அழைக்கப்படுகிறார்.
காமர்ஸில் பட்டம் பெற்ற சச்சிதானந்தன், எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் எல்எல்பி முடித்தார். தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

சேது - சச்சி
பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், எழுத்தாளர் சேதுநாத்துடன் இணைந்து மலையாள சினிமாவில் கதையாசிரியராக கால் வைத்தார். அவர்களின் முதல் திரைப்படமான சாக்லேட் ஒரு பெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி பல திரைப்படங்களுக்கு வழி வகுத்தது.

டியோ கூட்டணி
ஜோஷி இயக்கிய ராபின் ஹூட் திரைப்படம், பின்னர் 2011 இல் ஷாஃபி இயக்கிய மற்றொரு நகைச்சுவை திரைப்படமான மேக்கப் மேன், வைசாக் இயக்கிய சீனியர்ஸ் ஆகிய படங்களின் மூலம் இந்த டியோ கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் 2011 ஆம் ஆண்டு வெளியான டபுள்ஸ் படத்திற்குப் பிறகு இருவரும் பிரிந்தனர்.

சோலோ பர்ஃபாமன்ஸ்
இதனை தொடர்ந்து தனியாக கதை எழுத தொடங்கினார் சச்சி. ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ரன் பேபி ரன் படம் 2011ஆம் ஆண்டில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெயரை பெற்றது. சோலோவாக பல படங்களுக்கு கதையாசிரியராக இருந்துள்ளார் சச்சி.

முதல் இயக்கம் அனார்கலி
பின்னர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சச்சி, தனது நண்பர்களுடன் இணைந்து, சேட்டாயீஸ் என்ற படத்தை தக்காளி பிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்தார். இதனை தொடர்ந்து இயக்குநர் அவரதாரமும் எடுத்தார் சச்சிதானந்தன். அவர் இயக்கிய முதல் படம் அனார்கலி.

கடைசிப்படம்..
2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரித்திவிராஜ், பிஜூ மேனன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான இரண்டாவது மற்றும் கடைசிப் படம் அய்யப்பனும் கோஷியும்.

பிளாக்பஸ்டர் ஹிட்
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்திலும் பிஜூ மேனன், பிருத்விராஜ் இணைந்து நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

ரூ.50 கோடி வசூல்
வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. சச்சி தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை
புதுமுகம் ஜெயன் நம்பியார் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு சச்சிதானந்தன் ஸ்கிரிப்ட் எழுதப்போவதாக மலையாள திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இயக்குநர் சச்சிதானந்தன்.

கார்டியாக் அரெஸ்ட்
அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சச்சி. அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி சச்சிதானந்தத்தின் உயிர் பிரிந்தது.

பல முகங்கள்
அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சச்சிதானந்தன், வழக்கறிஞர், கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் மட்டுமின்றி நல்ல நாடகக் கலைஞரும் ஆவார். கல்லூரி காலத்தில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தும் ஒருங்கிணைத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











