என் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்
சென்னை: இயக்குநர் தங்கர்பச்சானின் 'அழகி' திரைப்படம் தனது தோல்விப் படமான 'செல்லக்கிளி' கதையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறுகிறார் திரைப்பட தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம்.
நடிகர் ரஜினிகாந்த்தை பைரவி படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக்கியவர் கலைஞானம். நக்கீரன் வாரம் இரு முறை இதழில் சினிமா சீக்ரெட் என்ற தொடரை எழுதி வருகிறார்.

இந்த வாரம் சினிமா சீக்ரெட் பகுதியில் 2002-ல் வெளியான தங்கர்பச்சானின் 'அழகி' திரைப்படம் குறித்து கலைஞானம் எழுதியுள்ளதாவது:
1978-ல் வெளியாகி தோல்வியைத் தழுவிய எனது "செல்லக்கிளி''படத்தின் கதையைத் தழுவி 24 ஆண்டுகளுக்குப் பிறகு படமாக எடுத்து வெற்றிகரமாக ஓடுவதாக என் நண்பர்கள் சொல்லவும், நான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.
அது... தங்கர்பச்சான் இயக்கிய "அழகி'' திரைப்படம். என்னைப் போன்ற சிந்தனை... தங்கருக்கும் வந்திருக்கலாமல்லவா? அதனால் ஒரே அலைவரிசையில் சிந்தித்து, அதேசமயம் அதை வெற்றிப்படமாக்கிய அவரை மனதார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
ஆகவே அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம்... "அழகி''கேரக்டருக்கு நந்திதாதாஸை தேர்வு செய்தது தங்கரின் புத்திசாலித்தனம். கதையின் முடிவு அதைவிட புத்திசாலித்தனம்.
இவ்வாறு கலைஞானம் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











