சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்.. உடலுக்கு கொரோனா பரிசோதனை.. இன்று மாலை இறுதிச்சடங்கு!
சென்னை: திரைப்பட இயக்குனர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால், திரையுலகினரும் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர்.
தனியாக வசிக்கும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பலர், இந்த லாக்டவுன் காரணமாக சிக்கிக்கொண்டனர்.

இயக்குனர்
இந்நிலையில் சென்னையில் தனியாக வசித்து வந்த இயக்குனர் பி.கே.ராஜ்மோகன் உயிரிழந்துள்ளார். இவர், அழைப்பிதழ், கேடயம் படங்களை இயக்கியவர். வயது 47. அழைப்பிதழ் படம், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ரதீஷ், சோனா, எம்.எஸ்.பாஸ்கர், பாலு ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். பி.கே ராஜ்மோகனும் இதில் நடித்திருந்தார்.

லாக்டவுன்
இதையடுத்து கேடயம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் இருந்தார். கோவையை சேர்ந்த இவர், சென்னை கே.கே.நகரில் தனியாக வசித்து வந்தார். லாக்டவுன் காரணமாக, தனது நண்பர் வீட்டுக்குத் தினமும் மதியம் சாப்பிட செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சாப்பிட வராததால், அந்த நண்பர் அவர் அறைக்குச் சென்று பார்த்தார்.

மாரடைப்பு
கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, ராஜ்மோகன் இறந்திருப்பது தெரியவந்தது. கே.கே.நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாகக் கூறப்படுகிறது.

உறவினர்கள்
அவரது உடலுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இதையடுத்து இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. ஊருக்கு உடலை கொண்டு வர வேண்டாம் என்று உறவினர்கள் தெரிவித்துவிட்டார்களாம். இதனால் நெசப்பாக்கத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











