பாகுபலி 2: கிளைமாக்ஸ்க்கு மட்டும் 30 கோடிகளை ஒதுக்கிய ராஜமௌலி!
ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் சுமார் 30 கோடிகளை இயக்குநர் ராஜமௌலி ஒதுக்கியிருக்கிறார்.
பாகுபலியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை ராஜமௌலி தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை நேற்றுமுதல் படக்குழு தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெய் மகிஷ்மதி
அதில் ''முதல் நாள் போர் சம்பந்தமான படப்பிடிப்புக் காட்சி அருமையாக வந்துள்ளது. பல மாதங்களாக இப்படத்தின் போர்க்காட்சிகள் குறித்து திட்டமிட்டது தற்போது மிகவும் உதவியாக இருக்கிறது. ஜெய் மகிஷ்மதி!'' என்று கூறியிருக்கிறார்.

பிரபாஸ்
இது தவிர சிறு வீடியோ ஒன்றையும் அவர் இணைத்திருக்கிறார். வீடியோவில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் முன் நிற்க ஜெய் மகிஷ்மதி என்ற குரலுடன் ஒரு ஆணின் கரம் நீள்கிறது. ஆனால் அது யாரென்பது தெரியவில்லை. எனினும் அது பிரபாஸாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

30 கோடி
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை 30 கோடி பட்ஜெட்டில் படம் பிடிக்கவுள்ளனர்.கிளைமாக்ஸ் தொடர்பான போர்க்கள காட்சிகளுக்கு மட்டும் 80 நாட்களை ஒதுக்கியிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற அக்டோபர் மாதத்துடன் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து விட்டு விஎப்எக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

ராம் கோபால் வர்மா
படத்தின் கிளைமாக்ஸ் பட்ஜெட்டைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்தப் பணத்தில் ராம்கோபால் வர்மா 16 படங்களை எடுத்து விடுவார் என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி 2 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











