'பாகுபலி 2' வந்து அதுக்குள்ள 3 வருஷமாச்சா? ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்.. ஹீரோ பிரபாஸ் நன்றி!
சென்னை: 'பாகுபலி 2' படம் வெளியாகி 3 வருடம் ஆனதை ஒட்டி, அதன் ஹீரோ பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், பாகுபலி.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்தது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது.

வசூல் சாதனை
இந்தப் படமும் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வசூல் சாதனை படைத்தது. மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் வசூலில் மெகா சாதனைப் படைத்த படமாக இது இருக்கிறது. மொத்தம் 1,810 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரே இந்திய படம்
இவ்வளவு கோடி வசூலித்த ஒரே இந்திய படம் இதுதான் என்கிறார்கள். இந்தியில் இந்தப் படத்தின் வசூல் சாதனையை வேறு எந்தப் படமும் முறியடிக்கவில்லை என்கிறார் திரைப்பட வியாபார ஆய்வாளர், தரன் ஆதர்ஷ். பிறகு ஜப்பான், சீனா, ரஷ்ய மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கும் வசூலில் சாதனைப் படைத்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
உலக அளவில் இந்தப் படம் பேசப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் நடிகர்கள் ராணாவும் பிரபாஸூம் இந்திய அளவில் பிரபலமானார்கள். இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இன்றோடு மூன்று வருடங்கள் ஆனதை ஒட்டி, ரசிகர்கள் #3YrsForMightyBaahubali2 என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

விரும்பிய படம்
பாகுபலி 2 படம் பற்றிய தகவல்களையும் வெளிவராதப் புகைப்படங்களையும் இதில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபாஸ், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர், 'பாகுபலி 2 இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையில் மிகப்பெரிய படமும் கூட. பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

கடமைப்பட்டிருக்கிறேன்
இந்த தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்புகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

3 மொழி படம்
இந்த படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படங்களாக மாறியுள்ளன. அப்படித்தான் 'சஹோ' படம் உருவானது. ஆனால், இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படமும் பான் இந்தியா முறையில் மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











