பைரசிக்கே பயம் காட்டிய ராஜமௌலியின் பாகுபலி 2!
பாகுபலி 2 படத்தின் விஸ்வரூப வெற்றி, அந்தப் படத்தை இந்திய சினிமாவின் அடையாளமாக மாற்றியிருக்கிறது. இந்திப் படங்கள்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்கிற நூற்றாண்டு ஆதிக்கத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது பாகுபலி. முதல் பாகம் தெலுங்கு படமாக அடையாளப்படுத்தப்பட்ட படம், உலகின் கவனத்தைத் திருப்பியது. பாகுபலி இரண்டாம் பாகம் மொழி கடந்த இந்திய சினிமா. எந்த மாநிலம் அல்லது எந்த நாட்டுக்காரன் பாகுபலி படத்தை பார்த்தாலும் அதை தனது படமாக உணரும் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
படம் ரீலீஸ் ஆன பின் இப்படம் பற்றிய தகவல்கள், திரையிடப்பட்ட தியேட்டர் எண்ணிக்கைகள், வசூல் விபரங்களை பட நிறுவனங்கள், சம்பந்தபட்ட ஏரியா விநியோகஸ்தர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்கள் யூகங்கள் அடிப்படையில் தகவல்களை எழுதி வருகின்றன. பாகுபலி படமா பாடமா என தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போல இந்திய சினிமாவுக்கு பாடம் சொல்லியிருக்கிறது பாகுபலி.

விஞ்ஞான வளர்ச்சியை, நவீன தொழில் நுட்பத்தை சினிமா வெற்றிக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதை படைப்பு ரீதியாக நிரூபித்திருக்கிறது. தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா தொடர் தோல்விகளை, பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதற்குக் வீடியோ பைரசிதான் காரணம் எனக் கூறி வருகின்றனர் தமிழ் திரைப்படத் துறையினர். படத்தின் போக்கு, திரைக்கதைக்கு பொருந்தும் கதாபாத்திரங்கள், கற்பனையை நம்பக்கூடிய காட்சிகளாக படமாக்கிவிட்டால் வெற்றி நிச்சயம். அதற்கு முன்னால் வீடியோ பைரசிகள் வேலைக்கு ஆகாது என்பதையும் தமிழ் சினிமாவுக்கு பாடமாகச் சொல்லியிருக்கிறது பாகுபலி வெற்றி. இந்தியாவில் தியேட்டரில் திரையிடப்படுவதற்கு முன் இணையத்தில் காலை ஐந்து மணிக்கே திருட்டு கும்பலால் முழுப் படமும் வெளியிடப்பட்டது.
இந்திய சினிமா வரலாற்றில் தியேட்டரில் திரையிடும் முன் அதிகாலையில் பாகுபலி இணையத்தில் வெளியானதை அறிந்தும் தயாரிப்பு தரப்பு பதட்டமடையவில்லை. தங்கள் படைப்பு மீது நம்பிக்கை கொண்டது. இந்தியா முழுவதும் பாகுபலி 2 படத்தை இணையத்தில் எத்தனை லட்சம் பேர் டவுன்லோடு செய்தனர் எனபதை நாட்டுக்கு முக்கியமான செய்தியாக சில தமிழ் தொலைகாட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. பாகுபலி படம் பார்க்க ரசிகன் தியேட்டரில் குவிந்து கொண்டிருந்தான். இணையத்தில் படத்தைப் பதிவிறக்கம் செய்தவர்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பினார்கள். வீடியோ பைரசியை பாகுபலி 2 படத்தை தியேட்டரில் பார்க்க தூண்டும் 'டெமோ'வாக மாற்றியதற்கு காரணம்? படத்தின் பிரம்மாண்டம். தியேட்டரில் போய் பாகுபலியை பார்த்தால் மட்டுமே பிரம்மாண்டத்தை உணர முடியும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால் பைரசியால் படத்தின் வசூலை, வெற்றியைத் தடுக்க முடியவில்லை. அனைத்து மொழிகளிலும் புதிய படங்கள் ரீலீஸ் தள்ளி வைக்கப்பட்டன அதனால்இந்தியா முழுவதும் 70 சதவீத தியேட்டர்களில் திரையிடப்பட்ட முதல் இந்தியப் திரைப்படம் பாகுபலி 2தான். தோராயமான கணக்குபடி மூன்று நாட்களில இந்தியாவில் மட்டும் பாகுபலி மொத்த வசூல் ரூ 350 கோடியைத் தாண்டி இருக்கும் என்கிறது வியாபார வட்டாரங்கள். இந்த வெற்றி இந்தி சினிமா உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. எங்களால்தான் படம் வியாபாரமாகுறது, வசூலாகிறது என மார்தட்டிய கதாநாயகர்களை கலங்க வைத்திருக்கிறது.
இப்படி பல்வேறு வகையில் இந்திய சினிமாவுக்கு பாகுபலி சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் என்ன ? உலகளவில் பாகுபலி 2 நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்ன? நாளை!
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











