2வது திருமணம் பண்ணேன்னு விளையாட்டுக்குச் சொன்னேன்.. அடுத்து விஜய் சேதுபதி படம்.. பப்லு பேட்டி!
சென்னை: நடிகர் பப்லு பிருத்விராஜ் அனிமல் படத்துக்குப் பிறகு தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறியுள்ளார். சுமார் 25 படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அனிமல் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.
58 வயதாகும் பப்லு அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா படத்தில் நடித்த நிலையில், சினிமாவில் அஜித் போல வரவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த சில முடிவுகளால் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் காலியாகி பல ஆண்டுகளை வீணடித்து விட்டதாக அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

ஆனால், தனக்கான நேரம் திரும்பவும் வந்துள்ளது என்றும் மறுபடியும் முன்பை போல கலக்குவேன் என்றும் அப்பா, தாத்தா ரோல் எல்லாம் இனி நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரம்: 1971ம் ஆண்டு தமிழில் வெளியான நான்கு சுவர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் தான் பப்லு. அடுத்த ஆண்டே சிவாஜி கணேசனின் நீதி படத்திலும் நடித்திருந்தார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், வானமே எல்லை, புதிய மன்னர்கள், மணிரத்னம், தாய் மனசு, அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மனைவியுடன் விவாகரத்து: நடிகர் பிருத்விராஜ் பீனா என்பவரை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 2022ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அவருக்கு ஆஹேத் எனும் ஒரு மகன் உள்ளார். இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தான் அவர் 55 வயதை கடந்த நிலையில், விவாகரத்து செய்ய காரணம் என பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் அதிகமான ட்ரோல்களையும் சந்தித்த நடிகராக பப்லு மாறினார்.

சும்மா மனைவின்னு சொன்னேன்: ஷீத்தல் எனும் 24 வயது பெண்ணுடன் 58 வயதான பப்லு பிருத்விராஜ் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் பரவின. இருவரும் இணைந்து ஏகப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிட்டு இருந்தனர். தன் மீது அந்த பெண்ணுக்கு காதல் வந்தது. திருமண விழா ஒன்றில் அந்த பெண் யார் எனக் கேட்க, ஃபிரெண்டுன்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு நினைச்சி பொண்டாட்டின்னு சொல்லிட்டேன். அதை வைத்து யூடியூப் சேனல்களில் எல்லாம் என்னை போட்டு நாறடிச்சிட்டாங்க என பேசியுள்ளார்.

விஜய்சேதுபதி படம்: அனிமல் படத்திற்கு டப்பிங் பேச போகும் போது என்னோட 4 சீன் இல்லை தூக்கிட்டாங்க, அதன் பின்னர் முதல் நாள் படம் நல்லா இல்லை என ரிசல்ட் வந்தது. பாலிவுட் படமும் போச்சா என நினைத்த நிலையில், அடுத்த நாள் சந்தீப் ரெட்டி வங்காவோட அண்ணன் போன் பண்ணி படம் ஹிட் 4 நாட்களில் 300 கோடி வசூல்னு சொன்னார். அடுத்து 600 கோடி, 1000 கோடி வரை வசூல் போச்சுன்னு சொன்னாங்க, ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் சின்ன ரோல் தான் கிடைச்சது, அதன் பின்னர், மெயின் வில்லனாக மாறிவிட்டேன் அந்த படம் நல்லா உருவாகி வருகிறது. சீக்கிரமே திரைக்கு வரும் என்றார்.


Click it and Unblock the Notifications











