ஐடி ரெய்டு பின்னணி..முக்கிய காரணம் இதுதானா?..தயாரிப்பாளர்களுக்கு போதாத காலமா?
சென்னை: தமிழ் திரையுலகில் திரைத் துறையினருக்கு இது போதாத காலம் போலிருக்கிறது, பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
முக்கியமாக பிரபல பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர் படகு வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது.
திரைத்துறையில் அதிகமாக புரளும் நிதி காரணமாக ரெய்டு என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரபலமான ஃபைனான்சியர் அன்புச்செழியன்
தமிழக திரைத்துறையில் மிகப்பெரிய பைனான்சியர் என்றால் அன்புச்செழியன் எனலாம். அன்புச்செழியன் தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு நிதி உதவி அளிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் முன்னணியில் இருந்து வருபவர். கோபுரம் பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிகில் படம் இவருடைய விநியோகத்தின் கீழ் வெளியானது. அப்போது இவரது வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது.

பிகில் ரெய்டு தொடர்ச்சியா
அன்புச்செழியன் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் பலகோடி ரூபாய் ரொக்கப் பணமும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு சம்மன் அனுப்பி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பலகோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு நடத்தியிருப்பதாக அப்போது வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் அன்புச்செழியன் வீடு அலுவலகம் சம்பந்தப்பட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

திரைத்துறையின் முக்கிய பிரமுகர்கள் இல்லம், அலுவலகங்களில் ரெய்டு
இதுவல்லாமல் சினிமா துறையை சேர்ந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி தியாகராஜன்,2 டி நிறுவனம் லட்சுமணன், ஞானவேல் ராஜா, மன்னர், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்டோர் அலுவலகம் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சினிமாத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு அலுவலங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.

100 கோடி ரூபாய் வர்த்தகத்தில் திளைக்கும் தமிழ் திரையுலகம்
தமிழ்திரை உலகில் சமீப காலமாக 100 கோடி ரூபாயை தாண்டிய பெரும் பட்ஜெட் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. பான் இந்தியா படங்கள் தயாரிப்பு என தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் என ஒரே நேரத்தில் பெரும் பொருட் செலவில் படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற படங்களை தயாரிப்பது, விநியோகம் செய்வதில் முன்னணி தயாரிப்பாளர்கள், பட நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர். இதற்கு நிதி உதவி செய்வதில் ஃபைனான்சியர்கள் உள்ளனர். இதில் முன்னணியில் இருப்பவர் அன்புச் செழியன்.

கொரோனா லாக்டவுனுக்குப்பின் வேகமெடுத்த படத்தயாரிப்பு
கொரோனா பேரிடர் லாக் டவுனுக்குப்பின் நிலை சீரடைந்த நிலையில் அதிக அளவில் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படம் வெளியாவது அதிகரித்துள்ளது. மிக வேக வேகமாக படங்கள் வெளியாகிறது. ஒரு படம் வெளியானால் அதற்குரிய வருமானம் பல வகைகளில் வருகிறது. ஓடிடியில் தனியாக வெளியிடுவது, தியேட்டர் விநியோகம், கூடுதல் காட்சிகள் மூலம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதால் முதல் சில வாரங்களில் அதிக அளவில் நிதி ஈட்டப்படுகிறது.

பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் பல நூறு கோடிகளில்
இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரே பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடுகின்றனர். இதனை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இது தவிர திரைத்துறைச் சார்ந்த பல்வேறு இன்ஃபார்மர்கள், இதற்கு முன் நடத்திய ரெய்டின்போது கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நடத்திய விசாரணையின் தொடர்ச்சி, திரைத்துறையில் ஒருவருக்கொருவர் இடையே உள்ள ரகசிய நிதி தொடர்பு போன்றவற்றையும் வருமான வரித்துறையினர் அவ்வபோஒது சேகரிப்பர். இதன் அடிப்படையிலேயே ரெய்டு நடக்கும்.

பான் இந்தியா படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள்
தமிழில் வெளியான பான் இந்தியா படங்கள் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி அடைந்து வருகின்றன. இதற்கான வருமான வரித்துறை வருமான விவரங்களை முறையாக பதிவு செய்துள்ளார்களா? என்கிற அடிப்படையிலும், வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்கிற அடிப்படையில் இன்றைய ரெய்டு நடந்திருக்கலாம் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இதுவல்லாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு அன்புச்செழியன் இல்லத்தில் நடந்த ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கூடுதலாக ரெய்டு நடக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற மாநில திரைத்துறையினரை நோக்கி ரெய்டு நகருமா?
மிகப்பெரிய முன்னணி பட தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது. அதே நேரம் தெலுங்கு, கன்னட மொழியில் பெரும் வெற்றி பெற்ற பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த படங்கள் வெளியாகியுள்ளன. அந்த தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் ரெய்டு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தந்த மாநில நிலைமைக்கேற்ப வரும் தகவல் அடிப்படையில் ரெய்டு நடக்கும் என்பதால் இது தொடரும் இத்துடன் முடிய வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியுள்ளது. திரையுலகினர் கொரோனா பேரிடரில் கடுமையான இழப்பைச் சந்தித்து மீண்ட நிலையில் ரெய்டுகள் மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது, அவர்களுக்கு இது போறாத காலம் என்றே கருதவேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











