நெட் ஃபிளிக்ஸ் நல்ல கன்னெட்டை மதிப்பதில்லை.. அனுராக் காஷ்யப் குற்றச்சாட்டு.. மனுசன் இறங்கி அடிக்கிறாரேப்பா!
சென்னை: பாலிவுட் இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப் எப்போதும் வித்தியாசமானவர்தான். வளைந்தே பழக்கப்பட்ட சமூகத்தில் நேராக வளர்பவர்களை பார்த்தால் திமிரு பிடித்தவர்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா, அப்படியான திமிரு பிடித்த, வளைந்து கொடுக்காத ஆகச்சிறந்த திரைக் கலைஞர். கடந்த ஆண்டு பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த அவர் பாலிவுட் சினிமா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் பாலிவுட் சினிமாவை காட்டிலும் சமூகத்திற்கு தேவையான படங்களை தென்னிந்திய சினிமாக்கள் கொடுப்பதாகவும், தான் தென்னிந்தியாவிற்கே குடிபெயர போவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அவர் பிரபல ஓடிடி நிறுவனமான நெட் ஃபிளிக்ஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர தற்போது இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளார். பேட் கேர்ள் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின்புரோமோசன் தொடர்பாக கலாட்டா பிளஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, நெட் ஃபிளிக்ஸ் குறித்த அவரது விமர்சனமும் குற்றசாட்டும் தான்.

நெட் ஃபிளிக்ஸ்: அந்த பேட்டியில் அவர் பேசுகையில், " நெட் ஃபிளிக்ஸ் இந்தியாவை, இந்திய சினிமா உலகை புரிந்து கொள்ளவில்லை. ஸ்கேம் 1992 என்ற டிவி சீரிஸ் சோனி லைவ் என்ற சேனலின் ஓடிடி தளத்தினை மொத்தமாக மாற்றிவிட்டது. ஆனால் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் நடந்த கதைகளை, ஸ்கேம்களை படமாக்குவதில், வெப் சீரீஸ்களாக ஆக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ளாததால் பல முட்டாள் தனமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் நல்ல நல்ல இந்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிநாட்டு கதைகளை இங்கே விற்பனை செய்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் ஸ்கேம் 1992 வெற்றி பெற்றதை அடுத்து, அவர்கள் தரப்பில் சீக்ரெட் கேம்ஸ் வெளியிடப்பட்டது. ஆனால் அதன் ரிசல்ட் என்ன ஆனது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை" என்று கூறியுள்ளார்.
மன அழுத்தம்: அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற மிகவும் முக்கியமான மற்றொரு காரணம், தரமான படங்கள் மீது பாலிவுட் கவனம் செலுத்தாமல், பாக்ஸ் ஆபிஸில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த காரணத்தினாலேயே அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் மும்பையை காலி செய்துவிட்டு வந்த பின்னர் அவர் அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மும்பையை விட்டு வெளியேறிய பின்னர் புகைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பலவற்றை விட்டுவிட்டதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நெட் ஃபிளிக்ஸ் தொடர்பாக தெரிவித்துள்ள விமர்சனம் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











