முருகதாஸுக்கு நேரமே சரியில்லை.. சர்காரைத் தொடர்ந்து ‘கத்தி’க்கும் சிக்கல்!
கத்தி படத்தின் ரீமேக் உரிமையை விற்க தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் உரிமையை விற்பதற்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கத்தி, துப்பாக்கி போன்ற வெற்றிப்படங்களைத் தந்த ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சர்கார் படக்கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதை என வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி சர்கார் தீபாவளிக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு ரங்கதாஸ் என்பவர் 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்றும் தனது கதையைப் படமாக எடுத்த முருகதாஸ் தனக்கு எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். மேலும் தெலுங்கில் 'கத்தி' படத்தை ரீமேக் செய்து, அதன் உரிமைகளை விற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதனால் வழக்கின் தீர்ப்பு வரும்வரை மற்ற மொழிகளில் 'கத்தி' ரீமேக் உரிமைகளை விற்கத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.
தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் 'கத்தி' ரீமேக் உரிமைகளை விற்க இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பான புகார்களை முருகதாஸ் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் மறுத்து, எதிர் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இதேபோல், சர்கார் பட வழக்கு அக்டோபர் 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











