பத்ரி நாராயணனின் புதுமையான மொட்டை மாடி இசைக் கச்சேரி.. ஓர் வித்தியாசமான அனுபவம்!
சென்னை: சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளருமான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.
மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி ஆகும். விளையாட்டுத்தனமாக தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சி, இசை பிரியர்களின் ஆர்வத்தால் இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது.

மொட்டை மாடியில் கச்சேரி: ஒரு மொட்டை மாடியில், பறந்து விரிந்த வானத்தின் நட்சத்திரங்களின் நேரடிப்பார்வையில் மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது என்பது ஓர் அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி மனதிற்கு உற்சாகம் தரக்கூடிய விஷயத்தை பத்ரி நாராயணன் சேஷாத்ரியின் மொட்டை மாடி இசை கச்சேரியில் செய்யலாம்.

புதுவித அனுபவம்: அண்மைக்காலமாக மொட்டை மாடி இசை கச்சேரி சென்னையில் பிரபமடைந்து வருகிறது. இந்த இசை குழுவின் சிறப்பம்சமே பார்வையாளர்களையும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்து, அவர்களையும் பாட வைப்பதுதான். பாட்டை கேட்டு ரசித்து லயித்துப்போன ரசிகர்கள் பத்ரி மற்றும் இசைக்குழுவினருடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் பாட்டு பாடலாம். எந்திரத் தனமான வாழ்க்கையில் ஓடி ஓடி களைத்துப்போனவர்களுக்கு இந்த மொட்டை மாடி இசை கச்சேரி முற்றிலும் உதவுகிறது.
யார் வேண்டுமானாலும் வரலாம்: இந்த மொட்டை மாடி இசை நிகழ்ச்சிக்கு எந்தவிதமான வயது காட்டுப்பாடும் இல்லை. உங்களின் பெற்றோர், நண்பர், குழந்தை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம். ஆனால் முன் பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். மேலும், இங்கு இசையைத் தவிர, பத்ரியின் தாயார் அன்புடன் தயார் செய்த சூடான, சுவையான டீயும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











