மலையாள டிவி சேனலை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்திய பாகுபலி
உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக அக்டோபர் 4ம் தேதி மழவில் மனோரமா டிவி சேனலில் ஒளிபரப்பான பாகுபலி திரைப்படம் அந்த சேனலை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்தியுள்ளதாம். இதனை அந்த டிவி சேனல் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய படம் பாகுபலி. கடந்த ஜூலை மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்த இந்த படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமம் தமிழ், இந்தி, தெலுங்கு, என தனித்தனியாக வழங்கப்பட்டது.

இதில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பாகுபலி திரைப்படம் கடந்த 4ம் தேதி ஒளிபரப்பானது. இந்தப்படம் ஒளிபரப்பான அக்டோபர் 4ம் தேதி கேரளாவில் பந்த் நடந்தது போல அமைதியாக காணப்பட்டது. சாலைகளில் எந்த வாகனமும் ஓடவில்லையாம். வெறிச்சோடிக்கிடந்ததாம்.
மனோரமா டிவியில் ஒளிபரப்பான பாகுபலி படத்தை மக்கள் ரசித்த காரணத்தால் சேனலில் டிஆர்பி சும்மா எகிறிவிட்டதாம். இரண்டரை மணிநேர படம் விளம்பரங்கள் சேர்த்து 4 மணிநேரம் ஒளிபரப்பானது.
மக்கள் சேனல் மாற்றாமல் பாகுபலி படத்தை பார்த்ததன் விளைவாக இரண்டாம் இடத்தில் இருந்த சேனல் 25,062 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியது. முதலிடத்தில் இருந்த ஏசியா நெட் சேனல், 4905 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பாகுபலி படத்தின் ஒளிபரப்பு உரிமையை முதன் முதலாக ஒளிபரப்பான விளம்பரத்திலேயே வசூலித்து விட்டதாம் மழவில் மனோரமா சேனல்.


Click it and Unblock the Notifications











