சூப்பர்! பல்வாழ் தேவனின் போர் வாகனத்தை உருவாக்கிய ஆர்ட் டைரக்டர்.. அரசு பேருந்துகளை வடிவமைக்க டீல்!
திருவனந்தபுரம்: பாகுபலி திரைப்படம் எனக் கூறினால் பெரும்பாலான ரசிகர்களுக்கு நினைவில் வருவது இந்த படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய செட்டுகள்தான். குறிப்பாக மகிழ்மதி அரண்மனையின் கம்பீரமான தோற்றமும் கதாநாயகன் பிரபாஸ், வில்லன் ராணா ஆகியோருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட போர் வாகனங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக பல்வால் தேவனின் போர் வாகனம் குறித்த கேள்விகள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பாகுபலி படத்தை பார்ப்பவர்களுக்கு மன்னர் ஆட்சி காலத்தில் மக்கள் எப்படி இருந்தனர் என்பதை தத்ரூபமாகவே தனது கலை இயக்கத்தால் வெளிப்படுத்தி இருப்பார் கலை இயக்குநர் சாபு சிரில்.
பாகுபலி படம் இப்படி இருக்க, அதற்கு நேர் எதிரான கதை அம்சம் கொண்ட அதிநவீன அறிவியலால் உருவாக்கப்பட்ட ரோபோவை மையமாகக் கொண்ட எந்திரன் படத்திற்கும் அட்டகாசமாக தனது கலை இயக்கத்தால் பெரும் பாராட்டை குவித்தவர் சாபு சிரில். குறிப்பாக ரஜினிக்கும் அக்ஷய் குமாருக்குமான சண்டைக் காட்சிகள் எல்லாம் பெரும் பாராட்டைப் பெற்றது. இவர் இது மட்டுமல்லாமல் ஹே ராம், அசோகா, சிட்டிசன், ரெட், வில்லன், ஓம் சாந்தி ஓம் போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்த படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாபு சிரில்: தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய வால்பாறையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த சாபு சிரில், சென்னையில் உள்ள கவின் கலை கல்லூரியில் தனது பட்டப்படிப்பை படிப்பை படித்தார். அதன் பின்னர் வெல்கம் ஹோட்டல், தாஜ் கோரமண்டல், மதுரா கோட்ஸ் போன்ற பெரும் பெரும் நிறுவனங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றினார்.

விருதுகள்: 1988 லிருந்து சினிமா துறையில் பணியாற்றி வரும் சாபு சிரில் இதுவரை கிட்டத்தட்ட 2500 விளம்பரங்களுக்கு மேல் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது அசாத்திய திறமையை பாராட்டி இந்திய அரசு நான்கு முறை சிறந்த கலை இயக்கத்திற்கான விருதினை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் ஐந்து முறை பிரின்சர் விருதுகளையும் சாபு சிரில் வென்றுள்ளார்.
கேரள பேருந்து வடிவமைப்பு: தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது கேரளா அரசின் அதிகாரப்பூர்வ போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-இல் சூப்பர் பாஸ்ட் பிரீமியம் ஏசி பேருந்துகளை வடிவமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது கேரளாவின் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக்கூடிய கே.பி. கணேஷ் குமாரின் கோரிக்கையை ஏற்று சாபு சிரில் ஏசி பேருந்துகளை வடிவமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக்கூடிய கணேஷ்குமார் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோதே கேரளா அரசின் பேருந்துகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

10 ஏசி பேருந்துகள்: கேரள அரசு தற்போது ஒரே ஒரு சூப்பர் பாஸ்ட் பிரீமியம் ஏசி பேருந்தை வாங்கி இயக்கி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அடுத்த கட்டமாக 10 சூப்பர் பாஸ்ட் பிரீமியம் ஏசி பேருந்துகளை வாங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பேருந்துகளை எதிர்வரும் ஓணத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும் கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஏசி பேருந்தில் மொத்தம் 42 இருக்கைகள் இருக்கும்படி சாபு சிரில் வடிவமைக்க உள்ளார். பல்வாழ் தேவனின் போர் வாகனத்தை வடிவமைத்த சாபு சிரில் கேரளா அரசின் சூப்பர் பாஸ்ட் பிரீமியம் ஏசி பேருந்துகளை வடிவமைக்க உள்ளதால் அவர் அதனை எவ்வாறு வடிவமைப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











