தள்ளிப் போனது பாகுபலி... ஜூலையில்தான் தரிசனம் கிடைக்கும்!
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தெலுங்குப் படமான பாகுபலி வெளியாவது இரண்டு மாதங்கள் தள்ளிப் போயின.
ராஜமவுலி இயக்கும், சரித்திரப் படமான இதில் நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, படத்தின் எடிட்டிங்கை கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் கவனிக்கிறார்.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாகுபலி படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.
படம் மே 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மே 15ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தோம். திட்டமிட்டபடி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளை முடிக்க முடியவில்லை. அதனால் பாகுபலி வெளியீட்டை ஜுலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம். படத்தின் டிரைலரை மே 31ம் தேதி வெளியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகுபலி படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











