ஆம் பகாசூரன் பா.இரஞ்சித்துக்கு எதிரான படம்தான்.. இதெல்லாம் தேவையா தேனப்பன் - வலுக்கும் கண்டனங்கள்
சென்னை: மோகன் ஜி இயக்கியிருக்கும் பகாசூரன் திரைப்படம் பா.இரஞ்சித்துக்கு எதிரான திரைப்படம்தான் என பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்திருக்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி இதுவரை திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சர்ச்சையை சந்திக்கக்கூடியவை. குறிப்பாக பட்டியலினத்தவர்களை தாக்கும் நோக்கிலேயே மோகன் படம் எடுக்கிறார் என்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் பரவலாக உண்டு.

பா.இரஞ்சித்துடன் மோதும் மோகன் ஜி
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவர் பா.இரஞ்சித். அவரது படத்துக்கென்று ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம் பா.இரஞ்சித் ஒரு தரப்பினருக்கு மட்டுமே படம் எடுப்பதாக பலர் கூறுவதுண்டு. இதனையடுத்து மோகன் ஜி சினிமாவுக்குள் வந்ததும் பா.இரஞ்சித்தை எடுப்பதற்கு எதிர் நிலையில் வேண்டுமென்றே படம் எடுக்கிறார் என்ற பேச்சும் எழுவதுண்டு. இதனால் பா.இரஞ்சித்திற்கும், மோகன் ஜிக்கும் எப்போதும் மோதல்தான் நிலவுவதாக திரையுலகில் டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.

பகாசூரன் எடுத்திருக்கும் மோகன் ஜி
இந்தச் சூழலில் மோகன் ஜி தற்போது பகாசூரன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆனந்தம் கூத்தாடும் என்ற பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் படமானது பிப்ரவரி 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

பத்திரிகையாளர்களை சந்தித்த பகாசூரன் குழு
இந்நிலையில் சென்னையில் பகாசூரன் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் இயக்குநர் மோகன் ஜி, செல்வராகவன், நட்ராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர் சாம். சி.எஸ் உள்ளிட்ட படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ஆம் பகாசூரன் பா.இரஞ்சித்திற்கு எதிரான படம்தான்
இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், "பகாசூரன் படத்துக்கு அனைவரது ஆதரவும் கிடைக்க வேண்டும். ஆம் இந்தப் படம் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு எதிரான படம்தான். இரஞ்சித்திற்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஏன் அந்த ஆதரவை இயக்குநர் மோகன் ஜிக்கு கொடுக்க மறுக்கிறீர்கள்" என்றார்.

பிரச்னையை பற்றவைத்த தயாரிப்பாளர் தேனப்பன்
தேனப்பனின் இந்தப் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பா.இரஞ்சித் தனது வேலையை கவனித்துக்கொண்டிருக்கிறார். பொது மேடையில் தான் இன்னாருக்கு எதிராக படம் எடுக்கிறேன் என்றோ; நான் இவருக்கு எதிரானவர் என்றோ பேசுவது கிடையாது.
அப்படி இருக்கும் சூழலில் தேனப்பனின் இந்தப் பேச்சு தேவையில்லாத ஒன்று. இங்கு அனைவருக்கும் படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அடுத்தவரை இழிவுப்படுத்துவதற்கோ; இருவருக்கு இடையில் பிரச்னையை பற்ற வைப்பதற்கோ சுதந்திரம் இல்லை. மூத்த தயாரிப்பாளராக இருந்துகொண்டு தேனப்பன் இப்படி பேசியிருக்கக்கூடாது என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











