வணங்கானில் சூர்யா நடித்திருந்தால்?.. வந்து விழுந்த கேள்வி.. காண்டான பாலா
சென்னை: பாலா இயக்கிய வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி வெளியானது. போட்டியாக வெளியான கேம் சேஞ்சர் படத்தைவிடவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து ரிலீஸான பாலாவின் படம் வெற்றியடைந்ததால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படத்தின் சக்சஸ் மீட் இன்று நடந்தது. இதில் பாலா, அருண் விஜய், சுரேஷ் காமாட்சி கலந்துகொண்டார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது படத்தில் இயக்குநராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக வித்தியாசமான படங்களை கொடுத்தார். இவற்றில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக பாலா தேசிய விருது பெற்றார். இப்படி தான் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் அவர்.

சறுக்கிய பாலா: அதேபோல் பரதேசி திரைப்படமும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்தப் படத்தை எரியும் பனிக்காடு என்கிற புத்தகத்தை தழுவி பாலா எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு பாலா இயக்கிய அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய மூன்று படங்களுமே எடுபடவில்லை. முக்கியமாக பாலா ஒரே டெம்ப்ளேட்டில் படத்தை எடுக்கிறார் என்கிற பேச்சுக்களும் பலமாகவே அடிபட்டன. அதுமட்டுமின்றி அவர் சில பிரச்னைகளையும் சந்தித்தார்.
என்ன பிரச்னை?: அதாவது அவர் தனது மனைவி மலரை விவாகரத்து செய்து பிரிந்தார். அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காகும். பாலாவோ ரீமேக்கே செய்ததில்லை. ஆனால் விக்ரம் கேட்டுக்கொண்டதால் ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டார். படத்தை பார்த்த விக்ரம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டதால் அது பாலாவுக்கு பெருத்த அவமானமாகிவிட்டது. இதனால் அவர்களது நட்பும் முறிந்துவிட்டது.
வணங்கான்: இதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்புக்கு அப்ளாஸ் விழுந்தது. அதேசமயம் சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்ப தவறவில்லை.
பாலாவின் பதில்: இந்நிலையில் வணங்கான் படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பாலாவிடம் வணங்கானில் சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு பதிலளித்த பாலா, "இப்போதுதான் வணங்கான் ஹிட்டாகிவிட்டதே. மக்கள் ஹிட் செய்து கொடுத்துவிட்டார்கள். பிறகு ஏன் இன்னார் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்; அமிதாப் பச்சன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வியெல்லாம் இப்போது எதற்கு? என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











