Vanangaan Box Office: பாராட்டு மழையில் வணங்கான்.. பாக்ஸ் ஆபிஸில் கொட்டியதா பண மழை? விபரம்!
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரிதா, ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் வணங்கான். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றார்கள். குறிப்பாக படத்தில் நடித்த நடிகர்களான, அருண் விஜய் மற்றும் ரிதாவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து விட்டதாக ரசிகர்கள் பாலாவைக் கொண்டாடி வருகின்றார்கள். இப்படியான நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் சூர்யா. மேலும் இந்தப் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கவும் இருந்தது. இப்படியான நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா. சூர்யா வெளியேறியதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய நடிகைகளான மமிதா பைஜு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட நடிகைகளும் விலகினர்.

அதன் பின்னர்தான் படத்தில் அருண் விஜய் கமிட் ஆனார். படத்தின் தயாரிப்பாளராகவும் சுரேஷ் காமாட்சி கமிட் ஆனார். படத்திற்கு பாடல்களை ஜி.வி. பிரகாஷ் குமார் உருவாக்கியுள்ளார். பின்னணி இசையில் சாம் சி.எஸ். அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். இவரது பின்னணி இசை படத்தின் தரத்தினை உயர்த்தவும், ரசிகர்களை படத்தோடு ஒன்றச் செய்யவும் காரணமாக அமைந்துள்ளது.
பாராட்டு: படத்தில் அருண் விஜய், ரிதா மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோரின் நடிப்பு அட்டகாசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, அருண் விஜய் மற்றும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிதாவின் நடிப்பு பிரமாதம். படத்தின் வசனங்கள், காட்சி அமைப்புகள், படம் சொல்ல வருகின்ற கருத்தான, ஒரு மாற்றுத் திறனாளியின் வலி மற்றொரு மாற்றுத் திறனாளிக்குத்தான் புரியும் என கூற வந்த கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
கண்ணீர்: படம் பார்த்த ரசிகர்கள், பாலாவையும் அருண் விஜய்யையும் பாராட்டி வருகின்றனர். அருண் விஜய் திரை வாழ்க்கையில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அருண் விஜய் நடிப்பில் வெளியான படத்தினை பார்த்த ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து அருண் விஜய் அழுதுள்ளார். இதற்கு முன்னர் 10 ஆண்டுகளுக்குப் முன்னர், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தபோது அஜித் ரசிகர்கள் அருண் விஜய்யின் நடிப்பினைக் கொண்டாடினார்கள்.
வசூல்: படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தினை ரிலீஸ் செய்வதுல் கே.டி.எம் பிரச்னை ஏற்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் படத்தினை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் பல்வேறு காட்சிகள் காலையில் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் படம் ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 2 கோடிகள் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் இல்லாமல், படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூலாக கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.


Click it and Unblock the Notifications











