திரை விமர்சகர்களே உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்.. இதை செய்யுங்கள்.. ராமுக்காக பாலா உருக்கம்
சென்னை: கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களை எடுக்கும் அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இப்போது நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படம் மட்டுமின்றி மிர்ச்சி சிவாவை வைத்து பறந்து போ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். பாலுமகேந்திராவிடம் நா. முத்துக்குமார் மூலமாக உதவி இயக்குநராக சேர்ந்த ராம் அடிப்படையில் இலக்கிய அறிவு ரொம்பவே இருப்பவர். பெரும்பாலும் பிறரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை பாலுமகேந்திரா நிறுத்தியிருந்த நேரம். மேகம் என்ற குறும்பட கதையை பாலுமகேந்திராவிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யவும் ஒத்துக்கொள்ள வைத்தவர். அதனை கண்டு அப்போது பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களே ஆச்சரியம்தான் பட்டனர்.
முதல் படம்: பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக்.

பறந்து போ: தொடர்ந்து இயக்கிய தரமணி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்போது அவர் ஏழு கடல் ஏழு மலை, பறந்து போ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஏழு கடல் ஏழு மலையில் நிவின் பாலி, பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா என இரண்டு வெவ்வேறு ஜானர்களில் பயணிக்கும் ஹீரோக்களை வைத்து ஒரே நேரத்தில் படத்தை இயக்கியிருக்கிறார். அதிலும் காமெடி ஆக்டரான மிர்ச்சி சிவாவுடன் ராம் இணைந்திருப்பது இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிற காரணமாக இருக்கிறது.
சூப்பர் ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. தந்தை - மகனுக்கிடையே இருக்கும் பாசத்தை படம் பேசுவது தெரியவருகிறது. ஏற்கனவே தந்தை - மகள் பாசத்தை வைத்து அவர் இயக்கிய தங்க மீன்கள் திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அதேபோல் பறந்து போ படமும் காலங்கடந்து கொண்டாடப்படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
பாலா பேச்சு: விழாவில் பேசிய பாலா, "ராமை எல்லோரும் பாராட்டிவிட்டார்கள். நான் தனியாக பாராட்ட வேண்டியதில்லை. படம் பார்த்துவிட்டு வருகிறேன். என்னை ரொம்ப பாதித்திருக்கிறது. படம் பார்த்து முடித்ததும் ராம் என் அருகில் இருந்தாலும் மாரி செல்வராஜைத்தான் நான் கூப்பிட்டு இந்தப் படம் ஒழுங்காக ரிலீஸாக நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் என்றேன். ஏனென்றால் இதில் மாரி செல்வராஜ்தான் இயக்குநர் போல் ஓடியாடி வேலை செய்தார்.
திரை விமர்சகர்களே: நான் இங்கே ஒரு கோரிக்கையோடுதான் வந்திருக்கிறேன். திரை விமர்சகர்களே, 'உங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள். ஏனென்றால் ராம் நமது தமிழ்நாட்டுக்கு வேண்டும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











