சூர்யா போனால் என்ன... சீனில் வந்த அருண் விஜய்: மீண்டும் வணங்கான் படப்பிடிப்பில் பாலா..?
சென்னை: சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணியில் தொடங்கிய வணங்கான் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. சூர்யா - பாலா இருவருமே வணங்கான் படம் கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தனர்.
ஆனாலும், வணங்கான் படத்தை கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் என பாலா உறுதியாக களமிறங்கிவிட்டார். அதன்படி, பாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தற்போது அருண் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ராப் ஆன வணங்கான்
நந்தா, பிதாமகன் என மாஸ் காட்டிய சூர்யா - பாலா காம்போ, மீண்டும் வணங்கான் படத்தில் இணைந்தது. சூர்யாவின் 2டி தயாரிப்பில் கன்னியாகுமரி பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் திரைப்படத்தில் சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென வணங்கான் கைவிடப்படுவதாக பாலா அறிவித்தார்.

சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்
அதேபோல், சூர்யாவும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார். அடுத்தடுத்து பாலாவும் சூர்யாவும் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனாலும் வணங்கான் படத்தை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என பாலா உறுதியாக இருந்தார். அதனால், அருண் விஜய்யிடம் சென்ற பாலா, தற்போது அவரை களத்தில் இறக்கிவிட்டார். இதன்மூலம் தான் நினைத்தபடி வணங்கான் படத்தை பாலா ரிலீஸ் செய்துவிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ஸ்டண்ட் சில்வா கொடுத்த அப்டேட்
இதுதொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட் என கேப்ஷன் கொடுத்து இயக்குநர் பாலாவை டேக் செய்துள்ளார். மேலும், இதில் அருண் விஜய் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃபர் மேல் ஆஃபர்
பல வருடங்களாக சினிமாவில் போராடி வரும் அருண் விஜய், முதன்முறையாக பாலாவுடன் இணைவது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே தற்போது அஜித்தின் ஏகே 62 படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித் - கெளதம் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்திலும் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலா, அஜித் என அடுத்தடுத்து அருண் விஜய்க்கு ஆஃபர் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாலாவின் அறிக்கை
இந்நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய போது பாலா வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது. அதில், "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், இது சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், சூர்யா நலன் கருதி எடுத்த முடிவு இது" என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











