இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை: சிங்கம்பட்டி ஜமீன்
அம்பாசமுத்திரம்: அவன் இவன் படத்தில் தரமில்லாத வசனங்களை பயன்படுத்தியுள்ள இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை என்று சிங்கம்பட்டி சமஸ்தான இளைய ஜமீன்தார் தாயப்பராஜா கூறியுள்ளார்.
பாலா இயக்கி வெளிவந்துள்ள "அவன் இவன்" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜமீன் தீர்த்தப்பதி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்த காட்சிகளும், வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக சிங்கம்பட்டி சமஸ்தானம் சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலாவை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கண்டன அறிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் ஒரு வாரஇதழுக்கு பாலா அளித்த பேட்டி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பாலா பேட்டி குறித்து சிங்கம்பட்டி இளைய ஜமீன் தாயப்பராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் பட்டம் சூட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. இயக்குனர் பாலா அவன் இவன் படத்தில் ஜமீன், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்து சித்தரித்துள்ள காட்சிகள் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இக்காட்சிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
ஜனநாயகத்தில் கண்டனம் தெரிவிக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உண்டு. இச்சூழ்நிலையில் வார இதழுக்கு இயக்குனர் பாலா அளித்துள்ள பேட்டியில் அவர்கள் வீட்டில் கொள்ளையடித்தேனா? அவர்கள் வீட்டுப் பெண்களை கையை பிடித்து இழுத்தேனா? என தரமில்லாத வாசகங்களை பயன்படுத்தியுள்ளார்.
வருங்காலத்தில் இயக்குனர் பாலா தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











