ஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா
கரகாட்டத்தை மையமாக வைத்து தான் இயக்கும் அடுத்த படத்துக்கு இசையமைத்துத் தருமாறு மீண்டும் இளையராஜாவிடமே போய்விட்டார் இயக்குநர் பாலா.
பாலாவின் முதல் படமான சேதுவை மறக்கமுடியாத படமாக்கியதில் கணிசமான பங்கு இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு.
இளையராஜா அல்லது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை மட்டுமே தன் படங்களில் பயன்படுத்தி வந்த பாலா, முதல் முறையாக பரதேசி படத்துக்கு ஜிவி பிரகாஷை இசையமைக்க வைத்தார்.
படமும் சுமார், பாடல்கள் - இசை படு சுமார் என்றாகிப் போனது. இருந்தாலும், தனது அடுத்த படத்துக்கும் முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்தாரம் பாலா.

ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லையாம். அதுவும் கரகாட்ட சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாத இசையைக் கொடுத்தாராம். சரி, சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால், அவர் அடிக்கடி தான் ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்தில் கவனம் செலுத்தி வந்தது பாலாவை எரிமலையாக்கிவிட்டதாம்.
இதனால் 'உன் பாட்டும் வேணாம்... நீயும் வேணாம்.. போய் நடிக்கிற வேலையை கவனி' என்று நேரடியாகவே கூறிவிட்டாராம் பாலா.
இப்போது மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டார் பாலா. சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களுக்குப் பின் இளையராஜா - பாலா இணையும் நான்காவது படம் இது.


Click it and Unblock the Notifications











