நடிகர்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கவில்லை.. களை எடுக்கிறேன்.. பாலா ஓபன் டாக்
சென்னை: பாலா இயக்கத்தில் இந்த மாதம் 10ஆம் தேதி வணங்கான் திரைப்படம் வெளியாகிறது. நீண்ட காலம் கழித்து பாலாவின் இயக்கத்தில் படம் வெளியாகவிருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அருண் விஜய் ஹீரோவாக நடிக்க ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதன் காரணமாக ப்ரோமோஷனில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார் இயக்குநர் பாலா.
பாலா என்றால் இந்திய திரையுலகில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பிதாமகன், நான் கடவுள் படத்துக்காக தேசிய விருதினை வென்ற அவர் பல ஹீரோக்களுக்கு பாதை போட்டுக்கொடுத்திருக்கிறார். சேது படம் இல்லை என்றால் விக்ரம் இல்லை; நந்தா, பிதாமகன் இல்லை என்றால் சூர்யா இல்லை; பரதேசி இல்லை என்றால் அதர்வா இல்லை; நான் கடவுள் இல்லை என்றால் ஆர்யா இல்லை. இவர்கள் அனைவருக்குமே பாலா இயக்கிய மேற்கூறிய படங்கள்தான் மிகப்பெரிய வெளிச்சத்தையும் வாழ்க்கையையும் போட்டுக்கொடுத்தது.

பாலாவுக்கு ஏற்பட்ட சறுக்கல்: இப்படி ஃபுல் ஃபார்மில் போய்க்கொண்டிருந்த பாலாவுக்கு கடந்த சில வருடங்களாக நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக அவர் இயக்கிய நாச்சியார், தாரை தப்பட்டை படங்கள் தோல்வியை சந்தித்தன. இது ஒருபக்கம் இருக்க தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அந்த விவாகரத்துக்கு ஒரு அரசியல் புள்ளிதான் முக்கிய காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
விக்ரமுடன் மோதல்: இது ஒருபக்கம் இருக்க விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை பாலாவின் இயக்கத்தில் அறிமுகம் செய்ய விரும்பி; அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்யுமாறு பாலாவிடம் கேட்டுக்கொண்டார். பாலாவும் தனது நண்பருக்காக தன்னுடைய கொள்கையிலிருந்து விலகி முதன்முறையாக ரீமேக் செய்யவும் ஒத்துக்கொண்டார். அதன்படி வர்மா படம் உருவானது. ஆனால் படத்தை பார்த்த விக்ரமுக்கோ படத்தின் மீது ஈர்ப்பு இல்லாததால்; அந்தப் படத்தையே வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்க செய்தார். அப்படி வெளியான ஆதித்ய வர்மா படுதோல்வியை சந்தித்தது.
வணங்கான்: விக்ரமின் அந்த செயல் பாலாவின் ரசிகர்களை கோபப்படுத்தியது. தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநரையே விக்ரம் இப்படி அவமானப்படுத்திவிட்டாரே என்று ஓபனாக கூறினார்கள். இதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார் பாலா. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதனையடுத்து அருண் விஜய்யை வைத்து படத்தை முடித்துவிட்டார் இயக்குநர். ஜனவரி 10ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
பாலாவின் பேட்டி: பட ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பாலா கொடுத்த பேட்டியில், "நான் மணிரத்னமோ, ஷங்கரோ கிடையாது. பெரிய டெக்னீஷியனும் இல்லை. நான் என்பவன் ஒரு கதை, வசனகர்த்தா அவ்வளவுதான். நடிகர்களை நான் பெரிதாக நடிக்க வைப்பதில்லை. எந்த நடிகருக்கும் புதிதாக நான் எதையும் சொல்லிக்கொடுக்குறதும் இல்லை. பாதை போட்டேன் என்றும் பெருமை பட்டதில்லை. அவர்களின் குறையை நிவர்த்தி செய்து களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











