அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா? மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்!
சென்னை: பாலா தற்கொலை முடிவை எடுக்கும் வரை எப்படி அவரை விட்டீர்கள் என அவரது குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார் நடிகர் விஜய்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். 23 வயதான இவர் டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார்.
நடிகர் விஜயின் தீவிர ரசிகரான பாலமுருகன், பாலா விஜய் மாஸ்டர் என்ற பெயரில் ட்விட்டரில் இருந்தார். எப்போதும் விஜய் மற்றும் விஜய் படம் குறித்த அப்டேட்டுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.

பாலா கடைசி டிவிட்..
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி தலைவன் படத்தையும் தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என டிவிட்டியிருந்தார். அவரது டிவிட்டை பார்த்த டிவிட்டர் நண்பர்கள் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து என்ன பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

குடும்ப பிரச்சனை
பலரும் காதல் தோல்வியா என்றும் கேட்டனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலளித்த பாலா காதல் பிரச்சனையெல்லாம் இல்லை எல்லாம் குடும்ப பிரச்சனைதான் என்றார். மேலும் என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள், எனக்கு பிறகு என் ஐடியை யாராவது உங்கள் பெயரில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று டிவிட்டியிருந்தார்.

பாலா தற்கொலை
11ஆம் தேதிக்கு பிறகு அவர் எந்த டிவிட்டையும் பதிவிடவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது பாலா தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் நேற்று #RIPBala என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர்.

விஜய் ஆறுதல்
திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். விஜயின் சக ரசிகர்கள், அவர் பாலாவின் குடும்பத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் கூற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜயும் பாலா குடும்பத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.

அதிர்ச்சியில் உள்ளோம்
இந்நிலையில் நடிகர் விஜய், தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து மறைந்த ரசிகர் பாலாவின் மைத்துனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்துள்ள அவர், எங்கள் குடும்பமே பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியிருக்கிறோம்.

எதையும் சொல்லவில்லை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானும் பாலாவும் ஒன்றாக கடைக்கு சென்றோம். நாங்கள் நார்மலாகதான் பேசிக் கொண்டிருந்தோம். பாலா என்னுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். ஆனால எதைப்பற்றியும் என்னிடம் பேசவில்லை.

உருக்கமாக கேட்டார்
தளபதி விஜய் எங்களுக்கு போன் செய்து பேசினார். அவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் கூறினார். இப்படி ஒரு எக்ஸ்ட்ரீம் முடிவை அவர் எடுக்க நீங்கள் எப்படி விட்டீர்கள்? என்று உருக்கமாக கேட்டதாகவும் கூறியுள்ளார்.

பேச மாட்டிங்களா?
மேலும் என்ன பிரச்சனைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும் நீங்கள் அனைவரும் அவரிடம் பேசியிருக்க கூடாதா என்றார். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு உதவ எனது மக்கள் இயக்கம் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்.

மன அழுத்தம்
தைரியமாக இருங்கள்.. இவ்வாறு நடிகர் விஜய் தங்களிடம் பேசியதாக கூறியுள்ளார். மேலும் பாலா, தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் நார்மலாக இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளே இருந்த அந்த அழுத்தத்தின் காரணமாக அவர் இப்படி ஒரு எக்ஸ்ட்ரீம் முடிவை எடுத்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











