சனி பகவான் 'பரதேசி' ஆனது எப்படி?
பாலா இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் புதிய படமான பரதேசிக்கு முதல் வைத்த தலைப்பு சனி பகவான். ஆனால் பின்னர் அதை பரதேசியாக்கிவிட்டார் பாலா.
இந்தப் படத்துக்காக ஏகப்பட்ட பேரை மொட்டை அடித்துள்ளார் பாலா. வெயிட் வெயிட்.. வேறு அர்த்தத்துக்குப் போக வேண்டாம். 500 பேருக்கும் அதிகமான துணை நடிகர்களை வரவழைத்து அவர்களுக்கு கிட்டத்தட்ட மொட்டைக்கு இணையான வட்டிருப்பு கட் செய்துள்ளார். கதாநாயகன் அதர்வா முரளியும் இதில் அடக்கம்.

அதர்வாவைத் திட்டவே இல்லை
பொதுவாக பாலா படத்தில் நடித்தவர்கள், அவரது கோபம், ஸ்பாட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து பல்வேறு விதமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, பாலா தன் ஹீரோவை ஒரு வார்த்தை கூடத் திட்டவே இல்லையாம். படம் முழுக்க கோணியையே உடையாக அணிந்து வாழ்ந்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாக அந்த உடையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.

சனிபகவான்
'பரதேசி படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி' தலைப்பு உறுதியானது.

இளையராஜா ஆசிக்குப் பிறகே...
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உடன் முதன்முதலாக இணைந்திருக்கும் பாலா, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசி பெற்ற பிறகே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறாராம்.

வைரமுத்து கேட்ட வாய்ப்பு
இந்த படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து பாலாவிடம் ‘அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள். வெட்கத்தை விட்டு கேட்கிறேன்' என்று கேட்டிருக்கிறார். ஆனால் பாலா எதுவும் சொல்லவில்லை. காரணம், அடுத்த படத்தை இளையராஜா அல்லது யுவனுடன் இணைந்து செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சீமானை அழைக்கவில்லை
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், என்ன காரணமா தெரியவில்லை. கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டார்.

சுடுகாட்டில் படுத்த பாலா
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா. படப்பிடிப்பு நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் தன்னையும் மறந்து இரண்டு நாட்கள் படுத்துறங்கிவிட்டு வந்தாராம்.
இந்தப் படம் வலி மிகுந்த ஒரு வரலாற்றைச் சொல்லும் படம்தான் என்றாலும், பாலாவின் படங்களுக்கே உரிய நகைச்சுவையும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள்.

அதிக அரங்குகளில்
பாலா எடுத்த படங்களிலேயே குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்று பரதேசி பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதைவிட முக்கியமானது, பாலாவின் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவிருப்பதும் இந்த பரதேசிதான்!


Click it and Unblock the Notifications











