நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்கன்னு.. வாரிசுகளை வைத்து படமெடுக்கிறாங்க.. பாலாஜி முருகதாஸ் காட்டம்!
சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை பதிவு செய்கிறோம் என சில இயக்குநர்கள் படங்களை எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிரான தனது குரலை பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகிலேயே ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒரே மாதிரியான வகையறா படங்கள் வரிசையாக உருவாக்கப்படுவதும் வெளியாவதும் சாதாரண விஷயம் தான்.

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை சொல்கிறோம் என வரும் இயக்குநர்கள் வாரிசு நடிகர்களை வைத்து அதுபோன்ற படங்களை இயக்குவது தான் வேடிக்கையான ஒன்று என பாலாஜி முருகதாஸ் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.
பிக் பாஸ் வின்னர்: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட போது, ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் எனும் முழுக்க முழுக்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு "வா வரலாம் வா" படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அருண் விஜய் படத்தில்: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்து வருகிறார். திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் அந்த படம் உருவாகி வருகிறது.
சினிமாவை விட்டே போறேன்: சமீபத்தில், தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு சம்பளமே தரவில்லை என்றும் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் பாலாஜி முருகதாஸ் பதிவிட்ட நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் தலை தூக்கியிருப்பதாக அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
வாரிசு நடிகர்களை வைத்து: ஒதுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்களின் படங்களை வாரிசு நடிகர்களை வைத்து இயக்குநர்கள் சமீப காலமாக எடுத்து வருவது தான் வேடிக்கையான விஷயம் என தற்போது பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். எந்த இயக்குநரை சொல்கிறார் பாலா என்றும் எந்த நடிகரை குறிப்பிடுகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

யாரை சொல்கிறார்?: உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜை சொல்கிறாரா? அடுத்து சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வரும் நிலையில், அவரை குறிப்பிடுகிறாரா? கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தை குறிப்பிடுகிறாரா? அல்லது அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கியுள்ள பாலாவை குறிப்பிடுகிறாரா? என பல கேள்விகள் எழுந்த நிலையில், அந்த போஸ்ட்டையே பாலா டெலிட் செய்து விட்டார். எந்த படத்தை சொல்றீங்க என்கிற கேள்விக்கு, எந்த படத்தில் அப்படி இல்லை என்கிற ட்வீட்டையும் பாலாஜி முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











