எல்லோரையும் பாலைய்யா இந்த வெளு வெளுக்குறாரே.. ஏஐயை வைத்து அலப்பறை கூட்டுறாங்க.. யப்பா என்னா அடி!
சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலைய்யாவுக்கு வயது 65. இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக அகண்டா 2 திரைப்படம் டிசம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதன் முதல் பாகமே பெரிய ட்ரோலை சம்பாதித்த நிலையில் இரண்டாவது பாகம் என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. இந்நிலையில் ஏஐ வீடியோ ஒன்று பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
என்.டி.ஆரின் மகனான பாலைய்யா குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர். தொடர்ந்து தனது தந்தை படங்களில் நடித்துவந்த அவர் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான சாகசமே ஜீவிதம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தை சாந்தான் பாரதியும், பி.வாசுவும் பாரதி - வாசு என்ற பெயரில் இயக்கியிருந்தார்கள்.முதல் படமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுக்க; அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.
முன்னணி நடிகர்: அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது திறமையை சீராக காண்பித்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே டோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக மாறினார். சினிமாவில் அவர் அறிமுகமான முதல் வருடத்திலேயே ஏழு படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதனையடுத்து அவரது மார்க்கெட் சரசரவென்று முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் பாலைய்யா: 2001ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார். சினிமாவில் தொடர்ந்து நடித்துவந்த பாலைய்யா அரசியலிலும் தடம் பதித்தார். 1982ல் தந்தைக்காக பரப்புரை செய்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர்; 2014ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ராமாராவ் குடும்பத்திலிருந்து ஆந்திர சட்டப்பேரவைக்கு சென்ற மூன்றாவது நபர் பாலகிருஷ்ணா.
சர்ச்சைக்கு பஞ்சமில்லை: பாலகிருஷ்ணாவை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2004ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷை துப்பாக்கியால் சுட்டார். அந்த பிரச்னை பூதாகரமாகி பின்னர் ஓய்ந்தது. அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவர் செய்யும் செயல்களும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திப்பது வழக்கம். ஆனாலும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்பவர் இல்லை.
அகண்டா 2: 65 வயதாகும் பாலகிருஷ்ணா இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான டாக்கு மகாராஜ் படம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அகண்டா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது டிசம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி ட்ரோல்களை சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
ஏஐ வீடியோ: இதற்கிடையே தமிழில் அறிமுகமாகாமல் இருந்த அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஐ வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அகண்டா 2வுக்காக க்ரீன் மேட்டில் ஷூட் செய்தார்கள். அப்போது கையில் கம்புடன் பக்கத்தில் இருக்கும் பொருட்கள், ஆட்கள் என யாரையும் எதையும் விடாமல் தாக்கும்படி ஏஐ வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வீடியோவில் கேமராவை துவம்சம் செய்யும் அவரே ஒருகட்டத்தில் போலி துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழும்படியும் காட்சிகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











