பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்
சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
இலங்கையின் மட்டக்களப்பில் 1939-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

(பாலு மகேந்திராவுக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி - படங்கள்)
1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.
தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.
சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.
தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.
இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா.
பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா.
இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள்.
பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











