'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ்
சென்னை: அம்மாவின் கைப்பேசி படத்திற்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

தங்கர்பச்சான் இயக்கத்தில் சாந்தனு-இனியா ஜோடி நடித்துள்ள அம்மாவின் கைப்பேசி படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி செல்வராணி ஆகியோர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
கடந்த மார்ச் மாதம் கடலூரில் உள்ள மேக்ஸ் புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சண்முக சுந்தரம், உள்ளூர் "டிவி சேனலில், விளம்பரம் வெளியிட்டார். "ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஆறு மாதங்களில் ரூ.2.20 லட்சம் கிடைக்கும் என அதில் கூறப்பட்டது. இந்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள், 10.10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அதன்பின் உறுதியளித்தபடி, போனஸ் தொகை வழங்கப்படவில்லை. பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கினார். அம்மாவின் கைப்பேசி படத்தின், ஸ்டுடியோ உரிமையை, மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக விளம்பரங்கள் வெளிவந்தன. பொது மக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, அம்மாவின் கைப்பேசி படத்தின் உரிமையை பெறுவதற்கு, பயன்படுத்தியுள்ளனர். தீபாவளி அன்று இந்தப் படம் திரையிடப்படும் என, பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் அம்மாவின் கைப்பேசி படத்தை வெளியிடக் கூடாது. நெகட்டிவ் மற்றும் படச் சுருள், ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வசம் உள்ளது. எனவே, அம்மாவின் கைப்பேசி படத்தின் நெகட்டிவ் மற்றும் படச் சுருளை வெளியிடக் கூடாது என மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம், தங்கர்பச்சன் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்தது. இதை எதிர்த்து தங்கர்பச்சான் சார்பில் மேக்ஸ்புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ராமனாதன் சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு தடை விதி்ததார்.
இதையடுத்து அம்மாவின் கைப்பேசி தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











