எப்போதும் வென்றான் படத்தை வெளியிட தடை: நீதிமன்றம் உத்தரவு
சென்னை: எப்போதும் வென்றான் படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை 18 வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், "எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார். என் தந்தை இறந்து விட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டேன்.

படத்தை வெளியிடுவதற்கு முன் தந்து விடுவதாகக் கூறினார். தற்போது பணத்தை தராமல் படத்தை 4 - ந்தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.டி.அம்பிகா எப்போதும் வென்றான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.
சஞ்சய், சுனு லட்சுமி நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இதே போன்ற பிரச்சினைக்காகத்தான் நேற்று முன்தினம் ஸ்ரீகாந்தின் ஓம் சாந்தி ஓம் படத்துக்கும் தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











