வீரப்பன் வெப் தொடருக்கு தடை இல்லை.. பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பெங்களூரு : சந்தன வீரப்பன் கதையை மையமாக கொண்டு வனயுத்தம் என்ற திரைப்படத்தை ஏஎம்ஆர் ரமேஷ் ரிலீஸ் செய்திருந்தார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ரமேஷ் படங்களை இயக்கி வருகிறார். இவரது குப்பி, காவலர் குடியிருப்பு, ஒரு மெல்லிய கோடு படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை.
இதனிடையே சந்தன வீரப்பன் கதையை மையமாக கொண்டு வெப் தொடரையும் ரமேஷ் இயக்கி வருகிறார். மொத்தம் 20 எபிசோடுகளாக இந்த தொடர் உருவாகவுள்ளது.

இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவர் ஏஎம்ஆர் ரமேஷ். இவரது குப்பி, காவலர் குடியிருப்பு, ஒரு மெல்லிய கோடு போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. சந்தன வீரப்பன் கதையை மையமாக கொண்டு வனயுத்தம் என்ற படத்தை இயக்கிய ரமேஷ், அதை வெளியிட்ட நிலையில், அந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

வீரப்பன் வெப் தொடர்
ஆயினும் இந்த திரைப்படத்தில் வீரப்பன் குறித்த விரிவான தகவல்களை சொல்ல முடியவில்லை என்று கருதிய இயக்குநர் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று 6 எபிசோட்களுக்கான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.

மொத்தம் 20 எபிசோட்கள்
மொத்தமாக 20 எபிசோட்களுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தடைவிதிக்க பெங்களூரு நீதிமன்றம் மறுப்பு
வீரப்பன் கதையை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே ஏஎம்ஆர் ரமேஷ் சார்பில் முத்துலட்சுமிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கதையை படமாக்குவதால் வீரப்பன், வீரப்பன் மனைவி மற்றும் மகளுக்கு எந்த கெட்டப் பெயரும் ஏற்பட போவதில்லை. அதனால் வீரப்பன் கதையை படமாக்குவதில் எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சந்தன வீரப்பன் கதையை வெப் தொடராக வெளியிட எந்த தடையும் இல்லை என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இயக்குநர் ரமேஷ் மகிழ்ச்சி
இதனிடையே, வீரப்பன் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து கர்நாடகாவில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவை இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறித்து இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வீரப்பனாக கிஷோர் நடிப்பு
இந்த வெப் தொடரில் வீரப்பனாக கிஷோர் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரில் கிரிமினல் சைக்காலஜி படிக்கும் மாணவியின் பார்வையில் நகர்வதாக கதைக்களம் காணப்படுகிறது. இந்த கேரக்டரில் அந்த மாணவியாக ரமேஷின் மகள் விஜயதா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த தொடர் தயாராகி வருகிறது. வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் இந்த தொடரின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











