Bava Chelladurai - அவமானப்படுத்தி பிக்பாஸில் பிரதீப் வெல்லட்டும் பரவாயில்லை.. பவா செல்லதுரை விளக்கம்
சென்னை: Bigg Boss 7 Bava Chelladurai (பிக்பாஸ் 7 பவா செல்லதுரை) பிக்பாஸ் 7 வீட்டில் நடந்தது குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கமளித்திருக்கிறார். அது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட சூழலில் அனன்யா எவிக்ஷன் ஆனார். பவா செல்லதுரை தாமாகவே விருப்பப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸில் பவா செல்லதுரை கலந்துகொண்டதிலிருந்தே அவரை சுற்றி பல சர்ச்சை வளையங்களும், விமர்சனங்களும் எழுந்தன.
கல்விக்கு எதிர் நிலை?: நிலைமை இப்படி இருக்க பள்ளி கல்வியின் முக்கியத்துவம் குறித்து விசித்திரா ஜோவிகாவிடம் பேசிய விவகாரத்தில் பவா செல்லதுரையின் நிலைப்பாடு கல்விக்கு எதிராக இருக்கிறது . ஒரு எழுத்தாளராக இருந்துகொண்டு அவர் இப்படி பேசலாமா என்ற கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர். மேலும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறித்து அவர் கூறிய கதையும் விமர்சனத்தை சந்தித்தது. பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேறிய பிறகும் அது தொடர்ந்தது. ஆனால் பவா செல்லதுரையோ எதற்கும் ரியாக்ட் காட்டாமல் அமைதியாக இருந்தார்.

பவாவின் விளக்கம்: இந்நிலையில் அவர் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், "எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களின் தொடர் அறிவுறுத்தல்களால் இந்த ஐந்து நாட்களாக அலைக்கழிக்கப்பட்டேன். எதுவும் எதிர்வினையாற்றாதே, பேஸ்புக் பார்க்காதே, பதில் ஏதும் எழுதாதே என்று.. அதனாலேயே இன்று வரை இம்மௌனம் காத்தேன். தொடர்ந்து பல நண்பர்கள் நான் என்றோ, யாருக்கோ செய்த சில உதவிகளை இந்நேரத்தில் என்னை தேற்றுவதாக சொல்லி என்னை உள்ளுக்குள் சுருங்க வைக்கிறார்கள்
ஏற்கட்டும் இல்லை சிதையட்டும்: ஆனால் என்னை அறிந்த, என் வாழ்நாள் முழுவதும் உடன் இருந்த நண்பர்கள் என நம்பிய பலரும் தங்கள் மீது ஒரு கல்லும் பட்டுவிடக்கூடாதென மௌனம் காக்கிறார்கள். நான் செய்த தவறுக்கு எல்லா கல்லெறிகளையும் என் திரேகமே ஏற்கட்டும் அல்லது சிதையட்டும்.
கல்வி நமக்கு எதுவும் செய்யாது என நான் மட்டுமல்ல.
ஒரு பொது சமூகத்தின் எதிரி கூட சொல்ல மாட்டான். கிராமம் கிராமமாகப் போய் சைக்கிள் மிதித்து இருபது வருடங்களாக அதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் அறிவொளி இயக்கத்துடன் சேர்ந்து நாடகம் போட்டவன் நான்.
இந்த வகுப்பறை கல்வியில் போதாமைகள் இருப்பதை தொடர்ந்து பேரா. வசந்தி தேவி, எஸ். எஸ் ராஜகோபாலன், பேரா. மாடசாமி தொடங்கி, தோழர் பிரான்சிஸ் கஜேந்திர பாபு வரை அரை நூற்றாண்டு காலமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நேரடி சாட்சி: அந்த வரிசையில் கடைசி வரிசை ஆள் நான். அதற்காக அவர்களோ, நானோ இக்கல்வியை நிராகரிக்க எங்குமே சொன்னதில்லை. ஒவ்வொருவரும் கல்வித்தரத்தை இன்னும் ஒரு அங்குலம் மேம்படுத்த ஒவ்வொரு வகையாய் செயல்படுகிறோம், பேசுகிறோம். அவ்வளவுதான். இணையத்தில் பரவிக்கிடக்கும் என் காணொளிகளே இதன் நேரடி சாட்சி.
அவமானம்: பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். பல தனியார் கல்வி நிறுவனங்களின் அழைப்பில் போய் அரசு பள்ளிகளின் முக்கியத்துவத்தை இன்றைக்கும் பேசுகிறேன். அந்த ஷோவில் நடந்தது ஜோவிகா என்ற அந்தப் பெண் கிட்டத்தட்ட விசித்திரா மேடத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார்

எடிட் செய்யப்பட்ட காட்சி: குடும்பத்தோடு தெருவில் நிற்கும்போது எப்படி மேடம் மேத்ஸ் மண்டைக்கு ஏறும் எனக் கேட்டதற்கு பெருங்குரலெடுத்து கத்தியும், தமிழில் உன் பெயரை எழுதத் தெரியுமா-டீ உனக்கு என்று விசித்திரா மேடத்தால் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட போது நான் ஜோவிகாவை சமாதானப்படுத்த போய் சொன்ன வார்த்தைதான் அது. எடிட் செய்யப்பட்ட அக்காட்சியை இப்போது பார்த்தபோது நான் முற்றிலும் தவறாக அர்த்தப்படுமாறு பேசி இருக்கிறேன் என்று தெரிகிறது என பல விஷயங்களை கூறியிருக்கும் அவர் அடுத்ததாக பிரதீப் குறித்தும் பேசியிருக்கிறார்.
ஏன் பிக்பாஸ்: வாழ்வில் ஒருமுறைக் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. அதில் ஆர்வமும் இருந்ததில்லை. முற்றிலும் வெற்று மனநிலையுடன் தான் பிக்பாஸ் - க்கு சென்றேன். அது ஒரு கேம் ஷோ என்பது புரியவே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. நீங்கள் நினைப்பது மாதிரி அந்த வீட்டில் எனக்கு எந்த சிறுமையும், அவமானமும் நிகழ்ந்துவிடவில்லை, அக்கலைஞர்கள் தங்கள் அப்பாவை மாதிரி கூட இல்லை. அதற்கும் மேலாக என்னை பாதுகாத்தார்கள்.
நானும் அந்த பதில்தான்: 24 மணி நேர நிகழ்வை வெறும் 45 நிமிடங்களில் பார்த்து விட்டு தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது எவ்விதத்திலும் நியாயமில்லை. நான் அங்கு ஒரு காஃபிக்காக விசித்திரா மேடம் முன் அவமானப்படுத்தப்பட்டேன் என்பது என் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என பதிவிட்டிருந்தார்கள். காஃபித்தூள் தீர்ந்துவிட்ட நிலையில் நானாக இருந்தாலும் அந்த பதிலையே கூறியிருப்பேன்.
பணம்தான் என் குறிக்கோள் எனில் நூறு நாட்களை சிரமப்பட்டேனும் கடந்திருக்கலாம். ஏனோ அன்று இரவு என் மனதை சூழ்ந்து கொண்ட இருண்மையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் மட்டுமே வெளியேறினேன். வெளியில் அதைவிடவும் பேரிருள் இன்னமும் அடர்த்தியாகவும், அழுத்தமாகவும் இணைய நண்பர்களால் என் மீது சூழவைத்துவிட்டது.
பிரதீப்: மூன்றாம் நாள் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரதீப் அழ ஆரம்பித்தார். அத்தம்பியை 'வாழ்' திரைப்படம் பிரிவியூ பார்க்கும்போதே பார்த்திருக்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு ஏன் எனக் கேட்கிறேன்.சார் நீங்க கடைசிவரை எங்க கூட இருக்கனும் சார். இவங்க யாராவது நீங்க எச்சில் துப்புறீங்க, அதற்கடுத்து நாலைந்து காரணங்களை சொல்லி உங்களை அசிங்கப்படுத்திடுவாங்களேன்று கவலையா இருக்கு சார் என சொல்லும்போது அங்கிருக்கிற விசித்திரா மேடம் உட்பட அவர் எப்படா எச்சி துப்பினார்? என கோபப்பட்டார்.
அவர் அதன் பின் எங்க கூட ஜாலியா இருக்கமாட்டிறீங்க என சொன்னபோது அதை மறுத்துதான் நான் என் இயல்பை பிக்பாஸே சொன்னாலும், கடவுளே சொன்னாலும் மாத்திக்க முடியாது என்றேன்.அவைகள் எடிட் செய்யப்பட்டு எச்சித்துப்புதலுக்காக நான் அவ்விதம் எதிர்வினையாற்றினேன் என திரிக்கப்பட்டிருந்தது. ஒரு நட்சத்திர விடுதிபோல வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அவ்வீட்டில் நாகரீகமுள்ள எந்த மனிதனும் எச்சில் துப்ப முடியாது. கேட்டால் அப்படித்தான் துப்புவேன் எனவும் சொல்ல முடியாது. வெளியில் இதை பல கோடி பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கடுத்த வார்த்தைகளில் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கவனமாக எடிட் செய்யப்பட்டிருப்பதை வெளியில் வந்த பிறகே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அனன்யா என்ற நடன கலைஞர் பிரதீப்பிடம் சாரை பற்றி ஏண்டா, அப்படி சொன்ன? எனக் கேட்டபோது அதுதான் 'பிக்பாஸ் கேம்" அது அவருக்கும் தெரியல, உனக்கும் தெரியல என சொன்ன காட்சியும் வெளியாகியுள்ளது. ஒரு வகையில் பிரதீப் தன் கேமில் முழு வெற்றியடைந்திருக்கிறார். அடையட்டும்.
முற்றிலும் சிதைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்ட அவருக்கு இப்பரிசு பணம் என்னை அவமானப்படுத்துவன் மூலம் கிடைக்குமென்றால் கிடைத்துவிட்டுபோகட்டும். அவரைவிட எல்லா நிலையிலும் வறுமையிலும் வாழ்வின் மேன்மையிலும் இருக்கும் நிக்ஸனுக்கும் இது கிடைத்தால் எனக்கு சந்தோஷமே என கூறி கதை சொல்லல் நிகழ்வு குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.
கதை சொல்லல்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஊறுகாய் விற்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்ச்சிக்கிறார். அவள் அவரை கன்னத்தில் அறைகிறாள். நிதானித்து பின் நான் தவறாக நடந்துகொண்டேன் என வருந்துகிறார். அவர்கள் அப்புறம் நட்பாகி 'அவள் திருமணத்திற்குப் பிறகு முதல் விருந்துத் தருகிறார்'. அப்பிரதியின் கடைசிவரி இப்படி முடியும். எல்லாவற்றையும் எனக்காக பொறுத்துக் கொண்ட விஜயலஷ்மி இதையும் பொறுத்துக் கொண்டார். விஜயலட்சுமிக்கு இந்நிகழ்வில் வேறுஎந்த முக்கியத்துவமும் இல்லை.
பிழை இல்லை முகம்: இச்சம்பவத்தை யாரும் எப்படியும் சொல்வழியாகப் பகிரலாம் இச்சம்பவத்தில் விஜயலஷ்மி டீச்சருக்கு எந்த இடமும் இல்லை. அப்பெண் அவரின் மாணவி இல்லை. விஜயலஷ்மி டீச்சரே இல்லை. மருத்துவ கல்லூரியை பாதியில் கைவிட்டு பாலேந்தரனோடு ஓடி வந்து டெலிபோன் டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர், நான் அன்றைய மனநிலையில் நுட்பமற்ற அப்பார்வையாளர்களுக்கு இச்சம்பவத்தை சுருக்கிச் சொன்னேன். அவ்வளவுதான்.
இப்பிரதியின் தலைப்பு 'பிழை' இல்லை. 'முகம்'. பிழை என்பது நான் அடுத்து சொன்ன ஜெயமோகனின் கதை.
இதெல்லாம் சாத்தியமா: வாசிப்பின் ஆரம்பம் அல்லது அறிமுகமுள்ள எவராலும் புரிந்துகொள்ள கூடிய இன்னொன்று அடுத்து நான் சொன்ன 'கால்" கதை. அது ஐந்து வருடங்களுக்கு முன் கமல் எனக்கு சொன்ன ஒரு சம்பவம். அன்று அவர் எனக்குச் சொன்னது பிக்பாஸில் சொன்னதின் இன்னொரு வெர்ஷன். அதை நான் புனைவாக மாற்றி சிறு கதையாக்கினேன். நான் எழுதின கதையை நானே மாற்றி சொல்வேனா? அது சாத்தியமா என மட்டும் யோசியுங்கள்.
கிரியேட்டர்கள்தான்: கமல் சொன்னது ஒரு நிகழ்வு. நான் எழுதியது ஒரு புனைவு.நான் கதைகளை மாற்றிச் சொல்கிறேன் என ஒரு கடைகோடி வாசகன் சொன்னாலும் அவரை அழைத்துபேசி அதை சரிசெய்பவன் நான். ஒரு கதைசொல்லி கதையை ஒப்பிப்பவன் அல்ல. அதிலிருந்து இன்னொன்றை உருவாக்குபவன். இருவருமே கிரியேட்டர்கள்தான்.


Click it and Unblock the Notifications











