ஜப்பான் படத்தின் தோல்விக்கு ஹீரோ கார்த்திதான் காரணமா?.. பவா செல்லதுரை பேச்சால் கிளம்பிய பஞ்சாயத்து
சென்னை: சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். முதல் படத்தின் மூலமே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் கடைசியாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியிருந்த அந்தப் படத்தை ராஜுமுருகன் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் எழுத்தாளர் பவா செல்லதுரை பேசியிருக்கும் விஷயம் புதிய பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அடுத்ததாக அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதனால் முதல் மூன்று படங்களிலேயே சரசரவென உயர்ந்தார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. அதனை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படம் கார்த்திக்கு 25ஆவது படமாகும். தனது அண்ணன் சூர்யாவுக்கு 25ஆவது படமான சிங்கம் எப்படி ஹிட்டடித்ததோ அதேபோல் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்தார் கார்த்தி. முக்கியமாக ராஜுமுருகன் இயக்கம் என்பதால் படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக பெரும் நிகழ்ச்சியெல்லாம் எடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியின் மூலம்தான் பருத்திவீரன் பஞ்சாயத்து மீண்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கார்த்தியை அறிமுகப்படுத்திய தனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முறையான அழைப்பு வரவில்லை என்று அமீர் பேச; அதற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
படுதோல்வியடைந்த ஜப்பான்: இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் இது ராஜுமுருகன் படமா என்று சந்தேகப்படும் அளவுக்கு படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் இருந்தது. இசையும் சுத்தமாக எடுபடவில்லை. டார்க் ஹியூமர் என்ற பெயரில் படுத்தி எடுத்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஓபனாகவே விமர்சனத்தை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பவா செல்லதுரை பேச்சு: இந்நிலையில் எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லதுரை ஜப்பான் படம் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "நான் ஜப்பான் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்தப் படம் படுதோல்வி அடைந்ததில் எனக்கு ரொம்பவே வருத்தம். ராஜுமுருகன், முருகேஷ் பாபு ஆகியோர் எல்லாம் அந்தப் படத்தில் வேலை பார்த்தார்கள். அந்தப் படம் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய டார்க் ஹியூமர் படம். ஆனால் படத்தில் ஹியூமர் என்று நினைத்த இடமெல்லாம் சீரியஸாக வந்துவிட்டது.
ஹீரோவிடம் விட்டிருக்கக்கூடாது: அதனால்தான் அந்தப் படம் சரியாக போகவில்லை. ஹீரோவிடம் அந்தப் படத்தை விடாமல் ராஜுமுருகன், முருகேஷ் பாபுவிடம் அந்தப் படம் இருந்திருந்தால் பிரமாதமான காமெடி படமாக வந்திருக்கும் என்று எனக்கு தோன்றியது. தமிழ் சினிமாவில் எல்லோரின் தலையீடும் இருக்கத்தான் செய்கிறது. தான் நடிக்கும் படம் எப்படி இருக்க வேண்டும் என்று ஹீரோ ஒன்று சொல்கிறார். தயாரிப்பாளர் அவர் பங்குக்கு ஒன்று சொல்கிறார். இசையமைப்பாளரும், எடிட்டரும்கூட சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
கார்த்தி தலையீடு?: இதனால் இயக்குநரோ, கதையாசிரியரோ குழம்பி போய்விடுகிறார்கள். இவரை திருப்திப்படுத்த 10 சதவீதம், அவரை திருப்திப்படுத்த 10 சதவீதம் என இயக்குநர் கலை மொத்தமாக காணாமல் போய்விடுகிறது" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், பவா செல்லதுரை சொல்வதை பார்த்தால் ஜப்பான் படத்தில் கார்த்தியின் தலையீடும், தயாரிப்பாளரின் தலையீடும் அதிகளவில் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். பவா செல்லதுரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











