Mammootty: நடிப்பில் எனக்கு போட்டி கமலோ ரஜினியோ இல்லை.. மம்மூட்டி சொன்ன தமிழ் நடிகர் யார் தெரியுமா?
கொச்சி: நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான டாமினிக் தி லேடீஸ் பர்ஸ் படம் மலையாளத்தில் சக்கை போடு போட்டது. மம்மூட்டி ஒரு நல்ல படம், நல்ல கதாபாத்திரம், நடிப்பதற்கு எல்லா வாய்ப்பையும் உண்டாக்கும் படங்கள் கிடைத்தால் அதனை தவறவிட மாட்டார். அதேநேரத்தில் ஒருவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றால், அவரைப் பார்த்து பொறாமைப் படாமல் இருக்க மாட்டார் என்பதற்கு சாட்சியமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகரை பாராட்டியும் உள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். மம்மூட்டி என்றாலே பிராண்ட் என ஆகிவிட்டது. அசாத்தியமான நடிப்பு, பேட்டியில் கேள்விகள் கேட்பதற்கு பிரமிக்க வைக்கும் பதில்கள் என மம்மூட்டியின் போக்கே தனிதான். அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும், ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானை தேடிக்கொண்டு வந்தால், அதில் மம்மூட்டியே நடித்து ஸ்கோர் செய்துவிடுவார். அந்த அளவிற்கு நடிப்பின் மீது பேரன்பு கொண்டவர்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் பேரன்பு. இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளி மகளின் அப்பாவாகவும், திருநங்கையை மறுமணம் செய்து கொள்பவராகவும் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமிழ் இலக்கியத் தளத்தில் மம்மூட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றால் அது, வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா செல்லத்துரையைச் சொல்லலாம். மம்மூட்டி எழுதிய மூன்றாம் பிறை புத்தகத்தை பவா செல்லத்துரையின் மனைவியும் எழுத்தாளருமான ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்தப் புத்தகம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற புத்தகமாக இப்போதும் உள்ளது.

மம்மூட்டி: அண்மையில் பவா செல்லத்துரையைச் சந்தித்த நடிகர் மம்மூட்டி தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் குறித்து பேசியுள்ளார். அதுவும் அந்த நடிகர் தான் தனக்கு இப்போது போட்டி எனவும் கூறியுள்ளார். அதாவது நடிகர் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு குறித்து அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் வெளியான பாட்டில் ராதா படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை ஆகச்சிறந்த கலைப்படைப்பாக மாற்றியிருப்பார்.

மின்னல் முரளி: இது மட்டும் இல்லாமல், அவர் நடித்த படங்களில் அவரது நடிப்பு மற்ற நடிகர்களின் நடிப்பில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். கூத்துப் பட்டறையில் இருந்து வந்தது ஒரு காரணமாக இருந்தாலும், இயல்பாகவே இவரிடத்தில் நடிப்பு என்பது கச்சிதமாக உள்ளது. இவர் குறித்து மம்மூட்டி பேசும்போது, எனக்கு இப்போது நடிப்பில் போட்டியாக இருப்பது குரு சோமசுந்தரம் தான். மின்னல் முரளி என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில்தான் அவர் நடித்தார். ஆனால் அந்த ஒரு படத்தில் அவரது நடிப்பை பார்த்த கேரள மக்கள் அவர் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவரைவிட சிறப்பாக நடிக்க வேண்டும், எனவே அவர்தான் இப்போதைக்கு எனது போட்டியாளர்" எனக் கூறியுள்ளார்.

ஈடுபாடு: இது தொடர்பாக பவா செல்லத்துறை அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர், கமல், ரஜினி, நாசர் போன்ற மூத்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலர் இருந்தும், அவர்கள் குறித்து கூறாமல், குரு சோமசுந்தரத்தை தனது போட்டியாளராக மம்மூட்டி நினைக்கிறார் என்றால், நடிப்பில் அவருக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











