வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு. இந்தச் சூழலில் வடிவேலு பற்றி நடிகர் பாவா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு..90களில் அறிமுகமான அவர் 90ஸ் கிட்ஸுக்கும் செட் ஆவார் தற்போதைய தலைமுறையான 2K கிட்ஸுக்கும் செட் ஆவார். சோஷியல் மீடியா சூழ்ந்த இந்த உலகில் பல மீம்ஸ்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது வடிவேலுதான். சில பிரச்னைகள் காரணமாக 10 வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அனைத்து வீடுகளின் தொலைக்காட்சிகள் வழியாக வைகைப்புயல் வீசிக்கொண்டுதான் இருந்தது.

அரசியல் மேடை: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடை ஏறிய வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அதிமுக - தேமுதிக கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே இனியும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என திரைத்துறையினர் அஞ்சி வடிவேலுவை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதுமட்டுமன்றி வடிவேலுவின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளுமே அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுவதுண்டு.
ரீ என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்து தீர்ந்து போனதை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. குறிப்பாக வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். அதேசமயம் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. பல வருடங்கள் கழித்து வடிவேலுவுக்குள் இருந்த குணசித்திர நடிகரை மாரி செல்வராஜ் வெளியே கொண்டு வந்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: மாமன்னன் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அந்தவகையில் அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஃபகத்தும், வடிவேலுவும் மாமன்னனில் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே இந்தப் படத்தில் இருவரையும் மீண்டும் பார்க்கும் நிலை உருவாகியிருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தொடரும் சர்ச்சை: வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸ் சுமூகமாக போய்க்கொண்டிருந்தாலும்; அவருடன் இணைந்து நடித்தவர்கள் அவர் மீது தொடர்ந்து சரமாரி குற்றச்சாட்டினை முன்வைத்துவருகின்றனர். அப்படி சொல்பவர்களின் பட்டியல் மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தச் சூழலில் வடிவேலு பற்றி பாவா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
பாவா பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "வடிவேலுவைப் பற்றி தெரியாதவர்கள்தான் அவரை சைக்கோ என்றெல்லாம் சொல்வார்கள். அவர் உண்மையாகவே பல துணை நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். நடிக்கவே தெரியாதவர்களுக்குக்கூட நடிப்பை சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் என்னை நடிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தால் இந்நேரம் நானெல்லாம் சினிமா பக்கமே இருந்திருக்கமாட்டேன். இன்றைக்கு நான் கஞ்சி குடிக்க காரணமே வடிவேலுதான். அந்த நன்றியை எப்போதும் மறக்கமாட்டேன்" என்றார்.
முன்னதாக பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் எடுக்கப்பட்டது. அப்போது வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











