விஜயகாந்த்துக்கு நோய் வர இதுதான் காரணமா?.. மரணத்தை முன்னரே கணித்தார்.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்
சென்னை: விஜயகாந்த் கொரோனா தொற்றால் உயிரிழந்த சூழலில் அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மேலும் விஜயகாந்த் முன்னதாகவே தனது இறப்பை கணித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த் மொத்தம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சாமானிய உருவம், மொழி, அழகு என அத்தனையிலும் அவர் எளிய மக்களை பிரதிபலித்ததால் ரசிகர்களிடம் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. இதன் காரணமாக அவர் ரஜினி, கமலுக்கு போட்டியாக வளர்ந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அரசியலில் கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில விஷயங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார். அதேபோல் அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். இந்த சூழலில் அவர் உயிரிழந்தார்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்த சூழலில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோவில், "விஜயகாந்த்துக்கு தமிழ் மீது நிறைய பற்று உண்டு. அவர் தமிழ் சினிமாவை தவிர்த்து வேறு எதிலும் நடிக்கவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு தமிழ் மீது பெரிய பற்று உண்டு.
கொரோனா தொற்று: அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக சொல்கிறார்கள். அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த தேமுதிக பொதுக்குழுவில் கலந்துகொண்டார். ஒருவேளை அப்போதுதான் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதா. அதை தவிர்த்திருக்கலாமே. அப்படி சொல்லித்தான் எல்லோரும் கதறுகிறார்கள்.
ஒருவேளை பொதுக்குழுவில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அதுமட்டுமின்றி தனது மரணத்தை முன்னரே கணித்துவிட்டதால்தான் அவர் தனது மனைவியை தேமுதிகவின் பொதுச்செயலாளராக ஆக்கிவிட்டு சென்றிருக்கிறார்" என்றார்.
உயிரிழப்பு:விஜயகாந்த் நேற்று முன் தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து மீண்டதால் கண்டிப்பாக இந்த முறையும் மீண்டு வந்துவிடுவார் என்று ரசிகர்களும் தொண்டர்களும் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெரிய சோகம்: விஜயகாந்த்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உறைய வைத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஊர்களில் விஜயகாந்த்தின் தொண்டர்களும், ரசிகர்களும் துக்கம் அனுசரித்துவருகின்றனர். திரையுலகில் இருந்தும் விஜய், இளையராஜா, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











