Nayanthara: நயன்தாராவுக்கும் தனுஷ்க்கும் என்ன பிரச்னை.. புட்டு புட்டு வைக்கும் பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கின்றார். இவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் நடிகர் தனுஷுக்கு 3 பக்கங்களுக்கு எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்தக் கடிதத்தை கண்ணியமாக எவ்வளவு திட்டமுடியுமோ அவ்வளவு திட்டித்தீர்த்துள்ளார் நயன். இந்நிலையில் நயன் இவ்வளவு கோபப்பட என்ன காரணம் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும்போது, படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலில் இருந்த இவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்தியாவே திரும்பிக் பார்க்கும் வகையில் நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தனது திருமணத்தை மையப்படுத்தி ஒரு டாக்குமெண்டரியை உருவாக்க நயன் திட்டமிட்டு, அதனை இயக்கும் பணியை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கரங்களில் ஒப்படைத்தார். திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள் அந்த டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாக்குமெண்டரி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரிலீஸ் ஆகவில்லை. நாளை மறுநாள் அதாவது நவம்பர் 18ஆம் தேதி டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகவுள்ளது.
தனுஷ்: நயன்தாரா பியாண்ட் த ஃபெரிடைல் என்ற டாக்குமெண்டரியில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளும் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், பாடல்களும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அறிந்து கொண்ட நடிகரும் நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்யக் கூடாது என தடை வாங்கினார். இதன் காரணமாகவே நயனின் திருமண டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

ரீ-எடிட்: இந்நிலையில் நயன் வெளியிட்டுள்ள கடிதத்தில், தற்போது ரீ - எடிட் செய்யப்பட்டுள்ள டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், ஏற்கனவே இருந்த நானும் ரௌடி தான் படத்தின் 3 நொடி காட்சிகளுக்கு தனுஷ் ரூபாய் 10 கோடி கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இது தொடர்பாக பேசிய வீடியோவில், தனுஷ், நயன்தாரா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு ஒன்றாக அமர்ந்து பேசியதாகவும், கடைசியாக இரு தரப்பினரும் சுமூகமாக பேசி ஒரு தொகையை தனுஷுக்கு நயன் தரப்பில் இருந்து கைமாற்றி விட்டதாகவும் கூறினார். அதனால்தான் டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகின்றது எனவும் பேச்சுகள் எழுந்தது. இந்நிலையில் நயன் வெளியிட்டுள்ள கடிதம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



Click it and Unblock the Notifications











