எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் விஜய் குறித்தும் அவர் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் இடம்பெற்ற 'விசில் போடு' பாடல் குறித்தும் புதிய பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். "எரிகிற கொள்ளியில் ஏன் இன்னும் எண்ணெய் ஊத்துற", தவெக தலைவரான பின்னர் இது உனக்கு தேவையா? என அதிரடியாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் விஜய் எனக் கூறப்படும் நிலையில், அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ளார்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை செய்ய வெளிநாட்டில் இருந்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வந்து நடிகர் விஜய் ஓட்டு போட்டு சென்றார்.
விசில் போடு பாடல்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகின்றனர், யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி வரிகளில் வெளியான விசில் போடு பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான அந்த பாடல் இதுவரை 43 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
கடுமையான விமர்சனங்கள்: யுவன் சங்கர் ராஜா இசை சரி இல்லை, மதன் கார்க்கி வரிகள் சரியில்லை, விசில் போடு பாடலில் தேவையற்ற அரசியல் மற்றும் லியோ தொடர்ந்து மீண்டும் ஒரு சரக்கு பாடல் என ஏகப்பட்ட விமர்சனங்கள் அந்தப் பாடல் வெளியானதும் கிளம்பின. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் விசில் போடு பாடலை கழுவி ஊற்றி உள்ளார்.
தவெக தலைவர் ஆன பின்னர்: நடிகர் விஜய் இதற்கு முன்னதாக வெறும் சினிமா நடிகராக இருந்தார். அதனால ஒரு கருத்து ஏதும் சொல்ல வேண்டும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதெல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு சரி. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் மீண்டும் ஷாம்பைனை தொறக்கட்டுமா என பாட்டை வைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் இளைஞர்களுக்கு நல்லதொரு எக்ஸாம்பிளாக விஜய் எப்படி இருப்பார் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
எரிகிற கொள்ளி: எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஏற்கனவே இளைஞர்கள் டாஸ்மாக்கில் விழுந்துக் கிடக்கின்றனர். மேலும், விஜய் இப்படி பாட்டை போட்டால் எப்படி. ஷாம்பைனை சாமானிய மக்களால் வாங்க முடியுமா? அதன் ஒரு பாட்டிலின் விலை 3 ஆயிரம் ரூபாய். ரத்த வெறியை எல்லாம் தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன என தனது கருத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பிரசாந்த் டான்ஸ் எப்படி?: கோட் படத்தின் விசில் போடு பாடலில் பிரசாந்த் சுமாராக நடனம் ஆடியுள்ளதாக ட்ரோல் பண்றாங்களே அதுபற்றி என்ன நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் வெறும் சின்ன க்ளிம்ப்ஸ் பார்த்துட்டு எதுவும் சொல்லக் கூடாது. பிரசாந்த் ஒரு நல்ல டான்ஸர், நிச்சயம் நல்லா ஆடியிருப்பார் என நம்புறேன். பாடல் வீடியோ ரிலீஸ் ஆகும் போது பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











