Marimuthu - சனாதனம்தான்.. 10 வருடம் முன்பே நடந்தது.. மாரிமுத்து இறப்புக்கு காரணம் சொல்லும் பயில்வான்
சென்னை: Marimuthu (மாரிமுத்து) மாரிமுத்து உயிரிழந்ததற்கு இதுதான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
இயக்குநர், நடிகர் என்ற இரண்டு முகங்களை கொண்டவர் மாரிமுத்து. அவர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துவிட்டு பிறகு வசந்த், எஸ்.ஜே.சூர்யா, ராஜ்கிரண், சீமான், மணிரத்னம் உள்ளிட்டோரிடம் பணியாற்றினார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை.

நடிகர்: இயக்குநராக வெல்லாவிட்டாலும் நடிகராக வென்றார் மாரிமுத்து. யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் அந்தப் படத்திலேயே அட்டகாசமான எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். அதனைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், மருது, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸானது. மேலும் இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன.
ஆதி குணசேகரன்: சினிமாவில் பெற்ற பிரபலத்தைவிடவும் அவருக்கு சின்னத்திரை பிரபல்யத்தை பெற்று தந்தது. எதிர்நீச்சல் நாடகத்தில் அவர் ஏற்றிருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மூலை முடுக்கெல்லாம் ஃபேமஸ். சூழல் இப்படி இருக்க அவர் கடந்த வெள்ளிக்கிழமை சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடல் நேற்று தேனி மாவட்டம் பசுமலைதேரியில் தகனம் செய்யப்பட்டது.
என்ன காரணம்?: மாரிமுத்து மரணத்தைத் தொடர்ந்து அவர் ஜோதிடர்களுக்கு எதிரான கருத்தை ஒரு விவாத நிகழ்ச்சியில் வைத்தார். அவர்களின் சாபம்தான் மாரிமுத்து உயிரிழக்க காரணம் என ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்தனர். அவர்களுக்கு பலர் தக்க பதிலடியையும் கொடுத்தனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் மாரிமுத்து மரணத்துக்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார்.
பயில்வான் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்துவருகிறேன். அதில் கவுண்டமணி ஹீரோ. மாரிமுத்துதான் வில்லன். அவர் இறந்த அன்று அந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான் கலந்துகொள்வதாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் அவர் சாப்பிடுவார். வீட்டுக்கு 4 மணி நேரம் மட்டுமே செல்வார். ஷூட்டிங் சாப்பாடு எல்லாம் ஹோட்டலிலிருந்து வருவது. எனவே அங்கு தொடர்ந்து சாப்பிடக்கூடாது. நம்பியார், சிவாஜி எல்லாம் வீட்டிலிருந்தே எடுத்துவந்துவிடுவார்கள்.
10 வருடங்களுக்கு முன்பே: மாரிமுத்துவுக்கு பத்து வருடங்கள் முன்பே மாரடைப்பு வந்திருக்கிறது. 3 ஸ்டண்ட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பஞ்சரான வீல் கொண்ட வண்டியை பார்த்துதான் ஓட்ட வேண்டும். சில வாரங்களுக்கு முன்பு ஜோதிடர்களுக்கு எதிராக பேசினார் மாரிமுத்து. 10ஆவது படிக்கும்போதே ஜாதகத்தை கிழித்து எறிந்துவிட்டேன் என்றார். உடனே பிறந்த தேதி உள்ளிட்டவைகளை சொன்னார். அதை வைத்து அந்த ஜோதிடர் உங்களுக்கு இடுப்புக்கு மேலே இதயத்தில் பிரச்னை இருக்குமே என சொன்னார்.
மாரிமுத்து அதற்கு இல்லை என்று சொல்லி நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரோ அதெல்லாம் இல்லை இதயத்துக்குள் ரத்தம் நன்றாக ஓடுகிறது. ஈரல் எல்லாம் நல்லா இருக்கும் என சொன்னார். இது சனாதனமாகவே இருக்கட்டும். யார் வாயிலும் நிற்கக்கூடாது" என்றார். இதற்கு முன்னதாகவும் பயில்வான் ரங்கநாதன் இதே போன்ற ஒரு கருத்தை கூறியதற்கு பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே கருத்தை பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











