பெண்கள், ஜோதிடர்கள் வாயில் நிற்கக்கூடாது..மாரிமுத்து வாழ்க்கை நிரூபித்திருக்கிறது.. பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Marimuthu (மாரிமுத்து) இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் மரணம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நடிகராக களமிறங்கினார் அவர். அதன்படி யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல படங்களில் நடித்தார். கமல் ஹாசன் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் என தொடர்ந்து படங்களில் நடித்தார். அவரது எதார்த்தமான உடல்மொழியும், வாய் மொழியும் ரசிக்கும்படியே இருந்தது
எதிர்நீச்சல்: பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கினார் மாரிமுத்து. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்களிலும் ஏகத்துக்கும் அவரை கொண்டாடினார்.
மரணம்: இந்தச் சூழலில் இன்று அவர் உயிரிழந்தார். காலையில் வளசரவாகத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோவில் சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. உடனே தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.
பயில்வான் ரங்கநாதன் வீடியோ: இந்நிலையில் மாரிமுத்து மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், "மாரிமுத்து பலரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அதிலும் ராஜ்கிரண் எள்ளாக இரு என்றால் மாரிமுத்து எண்ணெய்யாக இருப்பார். அந்த அளவுக்கு தலைசிறந்த உதவி இயக்குநராக இருந்தார். பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. ஆனாலும் சினிமாவுக்குள்ளேயே அவர் இருந்தார். மாரிமுத்து ஒரு புத்திசாலி. பெரும்பாலானோர் சினிமாவுக்குள் வந்தால் தங்களது பெயரை மாற்றிகொள்வார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை.
வாயில் நிற்கக்கூடாது: அவருடன் திரைப்படங்களில் நான் பணியாற்றியிருக்கிறேன். அவரது ஆசையே சொந்த வீடு கட்டுவதுதான். அதை கட்டிக்கொண்டிருக்கும்போதே அவர் போய்விடார். எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் ரொம்பவே ஃபேமஸ் ஆனார். பெண்கள் எல்லோரும் அவரை திட்டினார்கள். அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு ஜோதிடர்களுக்கு எதிராக பெரியாரின் சீடன் போல் பேசினார். யார் வாயிலும் நிற்கக்கூடாது என்பார்கள். குறிப்பாக பெண்கள் வாயில். பெண்கள் வாயிலும், ஜோதிடர்களின் வாயிலும் நின்றால் சரி இருக்காது என்பதை மாரிமுத்துவின் வாழ்க்கை நிரூபித்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











