விஜயகாந்தின் பலவீனம் இதுதான்.. மரணத்திற்கான காரணம் இது தான்.. பயில்வான் ரங்கநாதன் ஆதங்கம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மரணத்திற்கு காரணமே அவரின் அந்த பலவீனம் தான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டு அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, சத்யராஜ், விஜய் ஆண்டனி,மஞ்சூர் அலிகான் ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் பேருந்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கூட்ட நேரில் ஏற்பட்டதை அடுத்து அவரது பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழை நேசித்தவர் விஜயகாந்த்: இந்நிலையில், மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் மறைவு குறித்து பேசி உள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் கூட, தமிழை நேசித்தவர். தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுக்கூட தெலுங்கு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்களில் கேப்டன் விஜயகாந்தும் ஒருவர். அப்பாவின் ரைஸ் மில்லை கவனித்துக்கொண்டிருந்த விஜயகாந்த்,சினிமா மீது ஆர்வம் இருந்தால், எப்போது எல்லாம் எம்ஜிஆர் படம் வெளியாகிதோ அப்போது எல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவார்.
விஜயகாந்த்-இப்ராகிம் ராவுத்தர் நட்பு: எம்ஜிஆர் மீது மிகுந்த பற்று கொண்ட விஜயகாந்திற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைவந்ததே எம்ஜிஆரால் தான். அவருடைய ஆசைக்கு வித்திட்டவர் ஆருயிர் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் இல்லை என்றால் ராவுத்தர் இல்லை, இப்ராகிம் ராவுத்தர் இல்லை என்றால் விஜயகாந்த் இல்லை என்ற அளவுக்கு இருவரின் நட்பும் இருந்தது. விஜயகாந்திற்காக இப்ராகிம் ராவுத்தர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். இருவருமே நட்புக்கு இலக்கணமாக இருந்தனர். விஜயகாந்திற்காகவே ராவுத்தர் பட தயாரிப்பாளர் ஆனார். எப்போது எல்லாம் விஜயகாந்தின் மார்க்கெட் கீழே இறங்குகிறதோ அப்போது எல்லாம் ராவுத்தர் விஜயகாந்தைவைத்து தரமான படத்தை தயாரிப்பார் .
நேர்மையானவர் விஜயகாந்த்: விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே அந்த காலகட்டத்தில் நிர்வாகம் சரி இல்லாததுதான். எம்ஜிஆர் எந்த காரணத்திற்காக தனி கட்சி தொடங்கினாரோ, அதை பாணியில் அதே காரணத்திற்காக விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கூட்டணிவைக்காமலே எதிர்கட்சித் தலைவர் ஆனார். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார் விஜயகாந்த்.
அவரின் பலவீனம்: எம்ஜிஆர் எப்படி அனைவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டாரோ அதேப்போல அனைவருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் விஜயகாந்த். அவர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் மீன், நண்டு,கோழி என வகை வகையான உணவுகள் இருக்கும். குறிப்பாக ஸ்டண்ட் கலைஞர்கள் மீது அதீத அன்பு கொண்டவர். எந்த சண்டை காட்சிக்கும் இவர் டூப் போட்டதே இல்லை. அப்படி திடகாத்திரமான உடலை கொண்ட விஜயகாந்தை இப்படி பார்க்கும் போது மனம் வலிக்கிறது. அவருடைய பலவீனமே மதுபோதைதான், அந்த பலவீனம் மட்டும் அவரிடம் இல்லாமல் இருந்து இருந்தால், கேப்டன் இன்று நம்மோடு இருந்து இருப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











