நடந்ததைச் சொன்னால் நீ கண்ணகியா மாதவியானு வந்து விழும் கேள்வி.. நாகரிக சமூகத்தின் லட்சணம் இதுதானா?
சென்னை: சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்த கருத்துக்கள் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது நடிகர் தனுஷின் உதவியாளர் ஸ்ரேயாஸ் என்று சொல்லி ஒருவர் தனக்கு மெசேஜ் செய்ததாகவும். தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க நடிகைகளைத் தேர்வு செய்து கொண்டு இருப்பதாகவும், அந்த படத்தில் நடிக்க விரும்பினால், சில கமிட்மென்ட்கள் இருக்கும் என்றும் தெரிவித்தார்கள் என்று கூறி இருந்தார். தன்னிடம் இப்படி கேட்ட பின்னர் தான், இது ஏமாற்று வேலை தெரிந்து கொண்டு நடிக்கவில்லை என்று தெரிவித்து விட்டதாக கூறினார்.
மான்யா ஆனந்த் இவ்வாறு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் தனுஷின் உதவியாளர் ஸ்ரேயாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், தனது பெயரைச் சொல்லிக் கொண்டு யாரோ ஒரு மர்ம நபர் இளம் நடிகைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு இருக்கிறார். எனவே யாரும் ஏமாற வேண்டாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும்போது, அந்த மர்ம நபர் சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த்திற்கும் மெசேஜ் செய்திருக்கலாம். அந்த நபரை காவல்துறை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கும்போது நடிகை மான்யா ஆனந்த் குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதாவது, நடிகர் தனுஷ் தனது லெவலுக்கு ஆந்திரா , கேரளா என்று அந்த திரையுலகில் தனக்கான நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது, சின்னத்திரை நடிகையுடன் அவர் ஜோடி சேர மாட்டார். மான்யா ஆனந்த் இதை விளம்பரத்திற்காக சொல்லி இருக்க வேண்டும்.

மோசமான கேள்வி: அவர் சொல்வதைப் போல ஏதாவது சம்பவம் நடைபெற்றிருந்தால், கமிஷனர் அலுவகத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்க சொல்லுங்கள், ஆதாரத்தைக் கொடுங்கள். அதை விட்டுவிட்டு கேமரா முன்னால் சொல்கிறார்கள் என்றால், அவர் விளம்பரத்திற்காக சொல்லி இருக்கிறார் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. இப்படி வெளிப்படையாக பேசிய நடிகைக்கு இனி யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டர்கள். மான்யா ஆனந்தின் கெரியர் அவ்வளவுதான். இப்படி பல நடிகைகளை காட்ட முடியும். இவர் என்ன தேவைக்காக இப்படிக் கூறுகிறார். மான்யா ஆனந்த் என்ன கண்ணகியா? என்று கேள்வி எழுப்புகிறார்.
கண்ணகியா? மாதவியா?: பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டி, அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த பேட்டியின் தொடக்கத்தில் மான்யா ஆனந்த் என்றாலே யார் என்று தெரியாது என்கிறார். அதன் பின்னர் அவர் என்ன கண்ணகியா என்று கேள்வி எழுப்புகிறார். மான்யா ஆனந்த தன்னை அனுகியது தனுஷின் உதவியாளர் என்று கூறவே இல்லை. அப்படி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் மெசேஜ் செய்தார் என்றுதான் கூறியுள்ளார். தன்னை இப்படி ஒருவர் அனுகினார் என்று கூறியவரை நோக்கி, நீ கண்ணகியா மாதவியா என்று கேள்வி கேட்பது என்பது அநாகரீகத்தின் உச்சம். தான் எதிர்கொண்ட ஒரு பிரச்னையை வெளியே சொல்ல தான் கண்ணகியாக இருக்க வேண்டும் என்று பேசுகிற இவரது மனநிலை என்பது மிகவும் ஆபத்தானது. அது இந்த சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் சிந்தனை இது. இதுதான் இன்றைய சமூகத்தின் பொதுப்புத்தி. மேலும் அட்ஜெஸ்மெண்ட் தொல்லைகள் கொடுக்காமல் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

நடவடிக்கை: மான்யா ஆனந்தை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிட்டு, அவரை கண்ணகியா என்று கேள்வி எழுப்பும் பயில்வான் ரங்கநாதன் மீது தென்னிந்திய நடிகர் சங்கமோ, சென்னை பத்திரிகையாளர் சங்கமோ தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா இல்லை கண்டும் காணாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் நடந்ததை சொன்னவரின் நடத்தையை கேள்விக்குள்ளாக்க பயில்வான் ரங்கநாதனுக்கோ, மூன்றாவது நபருக்கோ என்ன உரிமை உள்ளது? இந்த தைரியத்தை தான் ஆண் என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
பிம்பம்: மேலும் மான்யா யாரிடமோ பணத்தை வாங்கிக் கொண்டு தனுஷ்க்கு எதிராக அவதூறு கிளப்புகிறாரா என்றும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, மான்யா ஆனந்த் அயோக்கியராக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற தோற்ற ஏற்படுத்த முயற்சிக்கிறாரோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒரு சர்ச்சை குறித்து விவாதிக்கையில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அடிப்படை ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாமல் லேபிள் குத்துது என்பது அருவருக்கத்தக்க செயல். அப்படியான அருவருக்கத்தக்க செயலை தான் பயில்வான் ரங்கநாதன் செய்துள்ளார்.
பதில் வருமா? அந்த பேட்டியில் அவர் கூறும் இன்னொரு விஷயத்திற்கு நடிகர் சங்கம் பதிலளிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதாவது, தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் நடிக்க வருவதில்லை. அதிகம் வெளிமாநில பெண்கள் நடிக்க வருகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் அட்ஜெஸ்மெண்ட்க்கு தயாராக இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இதற்கு நடிகைகளும், நடிகர் சங்கமும் பதில் அளிப்பார்களா? இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமா மீது தொடர்ந்து இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசே ஏன் இதற்காக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க கூடாது என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











