அன்று சப்பாணிக்காக காத்திருந்தார் மயிலு.. இன்று மகள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்காமல் போய் விட்டாரே!
சென்னை: இந்தியத் திரையுலகம் மறக்க முடியாத ஒரு நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி மறைந்த தினம் இன்று. அவருக்கு அவரது ரசிகர்கள், குடும்பத்தார் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
தமிழக அகராதியில் அழகுன்னா மயிலு ஸ்ரீதேவிதான். இப்போ அந்த இடம் வெற்றிடமாகி மனதை பிசைவதை யாரால் மறுக்க இயலும்.
அந்த காலத்தில் எம்ஜிஆர்-பானுமதி, எம்ஜிஆர்-சரோஜாதேவி, எம்ஜிஆர்-ஜெயலலிதா, எம்ஜிஆர்-லதா. அப்புறம் நடிகர் திலகம் பக்கம் வந்தால் சிவாஜி-பத்மினி இப்படி இவங்களோட ஜோடிப் பொருத்தத்தை அடிச்சுக்க ஆளில்லை.

இணையில்லா ஜோடி
அதுக்குப் பிறகு அதிகம் ரசிப்பது போல ஜோடி சேர்ந்தவங்கதான் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி. இணையில்லா ஜோடின்னு தமிழ் பட உலகம் கொண்டாடின ஜோடி. இவர்களின் இணைக்கு எல்லாமே வெற்றிதான்.

படங்கள் ஹிட்!
கமல்-ரஜினின்னு இவர் ஜோடி சேர்ந்து நடிச்சாலும் கமலுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதையே ஸ்ரீதேவி ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். 16 வயதினிலே படத்தில் ஜோடியாக நடிக்க ஆரம்பிச்சு, சிவப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், குரு, வாழ்வே மாயம் என்று அடுத்தடுத்து பல படங்கள்.

எலும்புகளில் பள்ளம்
முத்தாய்ப்பாய் அமைந்தது மூன்றாம் பிறை. அந்த கால கட்டத்தில் எல்லாம் அவர் தமிழ், தெலுங்கு இவைகளை ஓரம் கட்டி இந்தி பட உலகில் ஐக்கியமான தருணம். இந்தி ரசிகர்களுக்கு கழுத்து எலும்புகளில் பள்ளம் அதாவது குழி விழுந்தால்தான் பிடிக்கும் என்பதால், உயரத்துக்கு ஏற்ப கொழு கொழுன்னு அழகா இருந்த ஸ்ரீதேவி, உடல் இளைக்க ஆரம்பித்தார்.

முன்னணி நடிகை
உடல் இளைத்து, மூக்கு ஆபரேஷன் செய்து பெரும் அழகியாகி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர், இடையில் வந்து தமிழுக்கு நடித்ததுதான் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஸ்ரீதேவிக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த படம். ஆனால், கமலுக்குத்தான் கிடைத்தது.

பாலு மகேந்திரா
மூன்றாம் பிறை படத்தில் இருவரையும் ஜோடி சேர்த்தமைக்காக பாலு மகேந்திராவைப் பாராட்டாதவர்கள் இல்லை எனலாம்.கமல்-ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்த படம்.இந்த படம் இந்தியிலும் சத்மா என்று ரீமேக் செய்யப்பட்டு, சக்கை போடு போட்டது.

உலகம் அறியாதவர்
ஸ்ரீதேவி இயற்கையில் கடின உழைப்பாளி. நடிப்பைத் தவிர உலகம் அறியாதவர். அம்மா, சித்தி என்ன சொல்கிறார்களோ அது அவருக்கு வேத வாக்கு. ஒரு நாளைக்கு மூன்று ஷெட்யூல் போட்டு பல மொழிகளில் நடித்த நடிகையான அவருக்கு சேர்ந்தாற்போல தூங்க நேரம் கிடைக்காதாம். கோயிலில் கண்களை மூடிக்கொண்டு ஒரு ஷாட் எடுக்கும் நேரத்தில் உண்மையாக கண் அசந்து தூங்கிவிட்டாராம். தங்கை ஸ்ரீலதா, சித்தி பெண் மகேஸ்வரியுடன் விளையாடுவது ஒன்றுதான் இவரது பிடித்தமான பொழுது போக்காக இருந்ததாம்.

போனி கபூர்
இவருக்கு பேரிடியாக தலையில் இறங்கியது இவரது அம்மாவின் மரணம். அடைக்கலம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு போனி கபூர் குடும்பம் மிக ஆதரவாக இருந்ததாக கண்ணீருடன் பகிர்ந்துகொண்ட நாட்கள் உண்டு. எப்போதும் வீட்டில் கணவரையும், குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஸ்ரீதேவியை கணவர் போனி கபூர் செல்லமாக 'ஜோக்கர்' என்று அழைப்பாராம்.

என்ன வாழ்க்கைடா!
அழகிய குழந்தை முகம் கொண்ட இவருக்குள்ளும் இத்தனை நகைச்சுவை உணர்வா என்று ஆச்சரியப்படும்படி சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்த அவருக்குத்தான் மகளின் சினிமா வாழ்க்கையை கண்டு ரசித்து மகிழ முடியவில்லை. என்ன வாழ்க்கைடா!


Click it and Unblock the Notifications











