பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம்.
இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் கனடா நாட்டில் தனது குழுவினருடன் கச்சேரி செய்ய சென்றிருந்த அனிருத் நேற்று சென்னை திரும்பவில்லை.
அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இசைக் கலைஞர்கள் மட்டுமே சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று அனிருத் திரும்புவார் என்று சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஊடகங்கள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போதைய நிலவரப்படி கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் கனடாவில் இருந்து மும்பை அல்லது ஹைதராபாத் வழியாக அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனராம்.
ஆனால் அவரது குடும்பத்தினரே தற்போது அவர்களது வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தால் அனிருத் 19ம் தேதி கோவை போலீஸில் விசாரணைக்கு ஆஜராவாரா என்பது குழப்பமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications