அடக்கடவுளே.. பேஸ்புக் லைவ்வில் டிவி நடிகர் தற்கொலை முயற்சி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய போலீஸ்!
கொல்கத்தா: தான் தற்கொலை செய்து கொண்டு சாகப் போவதை பேஸ்புக்கில் லைவ் செய்த டிவி நடிகரை போலீசார் அதிரடியாக காப்பாற்றி உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
ஏகப்பட்ட நடிகர்கள் வேலை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.

தொடர் லாக்டவுன்
தொடர் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. வங்காளத்தை சேர்ந்த 31 வயது இளம் நடிகர் ஒருவருக்கு இதன் காரணமாக வேலை இல்லாத சூழல் அவருக்கு விரக்தியை அளித்துள்ளது. வேலையின்மை காரணமாக விரக்தி அடைந்த அந்த டிவி நடிகர் தற்கொலை செய்ய முடிவு செய்தது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூக்க மாத்திரைகள்
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தனது துக்கத்தை போக்கிக் கொள்ள தூக்க மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் வெறும் 31 வயதே ஆன பெங்காலி நடிகர்.

பேஸ்புக் லைவ்
மேலும், தான் தற்கொலை செய்து கொள்வதை தனது பேஸ்புக் பக்கத்திலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து ரசிகர்களை சோகத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் அந்த பெங்காலி நடிகர். ஒரு முழு மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக போட்டுக் கொண்டு வந்த அவரை ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

காப்பாற்றிய போலீஸ்
பேஸ்புக் லைவ்வில் தற்கொலைக்கு நடிகர் முயற்சி செய்வதை அறிந்த போலீசார் உடனடியாக பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவரது அட்ரஸை டிராக் செய்துள்ளனர். மேலும், அதிரடியாக லோக்கல் போலீசாரை அனுப்பி அவரை உரிய நேரத்தில் வீட்டில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அந்த நடிகரின் உயிரை காப்பாற்றி உள்ளனர்.

யாருக்கும் தெரியவில்லை
வீட்டில் அந்த நடிகரின் அம்மா மற்றும் சகோதரி இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவருக்கும் அந்த நடிகர் இப்படியொரு பைத்தியக்கார செயலை செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்துள்ளது. தனது தனி அறையை அடைத்துக் கொண்டு தற்கொலை முயற்சிக்கு மேற்கொண்டுள்ள நடிகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தீர்வல்ல
லாக்டவுன் காரணமாக ஏகப்பட்ட தொழில்கள் முடங்கி உள்ளன. வேலையின்மை காரணமாக பலரும் விரக்தி அடைந்து வருகின்றனர். ஆனால், அதற்காக தற்கொலை செய்து கொள்வது எந்தவொரு தீர்வையும் அளிக்காது. இதுவும் கடந்து போகும்!


Click it and Unblock the Notifications











