ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே ஹாட் டாபிக்காக இருப்பது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் வசூலை குவித்துவருகிறது. இன்னமும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனோ அந்தப் படத்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
மலையாள திரையுலகுக்கு சமீப காலம் பொற்காலம் . பிரமயுகம், பிரேமலு என மெகா ஹிட் படங்களாக வந்துக்கொண்டிருக்கின்றன. வணிக ரீதியாக ஹிட் கொடுப்பது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்

உண்மை சம்பவம்: டூர் செல்ல பிளான் போடும் நண்பர்கள் பட்ஜெட் காரணமாக கொடைக்கானல் செல்வதும்; அங்கு குணா குகையில் சிக்கிக்கொள்ளும் நண்பரை மற்றவர்கள் எப்படி மீட்டார்கள் என்பதுதான் ஒன்லைன். 2006ஆம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் மலையாளத்தில் ஹிட்டான அந்தப் படம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டுக்குள்ளும் பரவி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது.
என்ன காரணம்: சிம்ப்பிள் ஒன்லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமான மேக்கிங்கோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். தமிழ்நாட்டில் அந்தப் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆவதற்கு முக்கிய காரணம் என்றால் க்ளைமேக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல். 33 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இப்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பாடலை இயக்குநர் ப்ளேஸ் செய்த இடம் அப்ளாஸை அள்ளியிருக்கிறது.
பாராட்டிய கமல் ஹாசன்: படம் தமிழ்நாட்டிலும் மெகா ஹிட்டானதை அடுத்து கமல் ஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். அவர் மட்டுமின்றி தனுஷ், விக்ரம் உள்ளிட்டோரும் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர். மேலும் அவருடன் தனுஷ் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மஞ்சும்மல் படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் இதுபோன்று ஒரு படம் தமிழில் ஏன் வரவில்லை. சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு விளையாண்டுவிட்டார்களே என்று ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
ஜெயமோகன் விமர்சனம்: இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாடும் படத்தை கொண்டாடிக்கொண்டிருக்க எழுத்தாளர் ஜெயமோகனோ படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். படத்தை மட்டுமின்றி மலையாள மக்கள் மீதும் வார்த்தை தாக்குதலை தொடுத்திருந்தார். அது பெரும் கண்டனத்தை சம்பாதித்தது. மேலும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது இவர் மட்டும் எதிர்ப்பதன் மூலம் விளம்பரத்தை தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும்; மலையாள திரையுலகில் ஜெயமோகனுக்கு வாய்ப்பு இல்லை அதனால்தான் இவ்வளவு வன்மமும் என்ற பதிலடியும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாக்யராஜ் பேச்சு: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒரு பட விழாவில் பேசிய பாக்யராஜ், "மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தைவிடவும் இங்குதான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மக்கள் ரசிப்பதால்தான் ஓடுகின்றன. ஆனால் நம்ம ஊர் எழுத்தாளர் அதனை காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களையும் விமர்சித்துவிட்டார். பெரிய எழுத்தாளர் இப்படி பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்ல என்ன காரணம் என்றால் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையெ என்று கேரள மக்கள் நினைத்துவிடக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











