'மீண்டும் எழுவோம்'.. வரும் தலைமுறைக்காக.. கொரோனா லாக்டவுனை ஆவணப்படுத்திய பிரபல இயக்குனர்!
சென்னை: கொரோனா ஊரடங்கை பிரபல இயக்குனர் பரத்பாலா 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தி உள்ளார்.
ஒவ்வொரு முறையும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இயக்குனர் பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'வந்தே மாதரம்', 'ஜன கன மன', மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர். அனைத்தும் வரவேற்பைப் பெற்றவை.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கை 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தி உள்ளார். வரும் தலைமுறைகளுக்காக பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் பதிவு பிடித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த தலைமுறை, கண்ணுக்குத் தெரியாத நோய் தொற்றால் இந்தியா எப்படி ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகளை இந்த குழு ஒருங்கிணைத்துள்ளது. வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதை படமாக்கியுள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் இந்தியாவின் கொரோனா ஊரடங்கை, கண்டிப்பாக எடுத்துரைக்கும். இதற்கு 'மீண்டும் எழுவோம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இதன் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது என விர்டுவல் பரத் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











