இயக்குனர் பாரதி ராஜா தலைமையிலான புதிய சங்கத்தைக் கலைக்க வேண்டும்.. தயாரிப்பாளர்கள் கோரிக்கை!
சென்னை: பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய சங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
இந்த புதிய சங்கத்துக்குத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தை உடைத்து, புதிய சங்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது. அந்த கூட்டத்தை இன்று மாற்றி வைத்தனர். அதன்படி அண்ணா சாலையில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இந்தக் கூட்டம் காலையில் நடந்தது.

வீட்டை பிரிக்கும் செயல்
கூட்டத்துக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பாரதிராஜாவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய் வீட்டை பிரிக்கும் செயல். 4 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் 1500- க்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்நிலையில் ஒரு சிலர் சுயநலத்திற்காக நமது சங்கம் பிளவுபடுவதை ஏற்க முடியாது' என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன்
வி.சேகர் கூறும்போது, தற்போது தமிழ் சினிமா ஸ்தம்பித்து உள்ள நிலையில் புதிய சங்கம் துவங்குவது, தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும்.
எனவே பாரதிராஜா புதிய சங்கம் துவங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். தயாரிப்பாளர் கே.ராஜன் கூறும்போது, கொரோனா காலத்தில் எடுத்த படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களை பாரதிராஜா வழிகாட்ட வேண்டும் என்றார்.

கலைப்புலி தாணு
கலைப்புலி தாணு கூறும்போது, எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கிய சங்கம் இது. தற்போதைய சூழலில் பாரதிராஜா தவறு செய்யவில்லை அவருடன் இருந்த 4 பேர் இந்த சூழலுக்கு அவரை தள்ளி உள்ளனர். பாரதிராஜா வந்தால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவரை தேர்ந்தெடுக்கலாம். அவர் மீது மரியாதை வைத்துள்ளோம். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. ஒன்றாக இருப்போம்' என்றார். பின்னர் அவர்கள், பதிவுத்துறை அதிகாரியிடம் பாரதிராஜாவின் சங்கத்தின் பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











