சமூக அமைதி குலையும்-பாரதிராஜாவின் 'அன்னக்கொடிக்கு' தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?
சென்னை: பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தை தென்மாவட்டங்களில் திரையிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேவர் பாசறை இயக்கம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஏ.கே. ரகுபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
அன்னக்கொடி திரைப்படத்தின் கதையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், கதாநாயகி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உள்ளது. இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள், தென் மாவட்ட மக்களிடையே சமூக அமைதியைக் குலைப்பதாக இருக்கிறது.

இதேபோன்ற கதையம்சம் கொண்ட பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளியானபோது, தென்தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே, அன்னக்கொடி திரைப்படத்தை தென்மாவட்டங்களில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து தலைமைச் செயலர், திரைப்படத் தணிக்கை வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்க மனு நீதிபதி என். கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கூறுகையில், திரைப்படம் திரைக்கு வராத நிலையில், மனுதாரர் படத்தின் கதையம்சத்தை முழுமையாக அறியாத நிலையில் சமூக அமைதியை சீர்குலைக்கும் என்று எப்படி கூற முடியும் என்றார். மேலும் வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதி அதாவது நாளைக்கு ஒத்தி வைத்தார்.
அன்னக்கொடி படம் நாளை தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











